டெல்லி திகார் சிறையில் 100-வது நாளாக ப.சிதம்பரம்- ஜாமீன் மனு மீதான உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு 100 நாட்களாகி உள்ளது. இந்நிலையில் அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று ஒத்திவைத்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய நிதி முதலீட்டை அனுமதித்த விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெற்றது என சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் ப. சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ந் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிபிஐ தொடர்ந்த இந்த வழக்கில் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால் அதற்கு முன்னரே சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் டெல்லி திகார் சிறையிலேயே ப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இதனால் சிதம்பரம் சிறையில் இருந்து விடுதலையாக முடியவில்லை.
இந்நிலையில் அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுக்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்தன.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மேல்முறையீடு செய்தார். ஆனால் அமலாக்கப் பிரிவு தரப்பில் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் தர கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போதும் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் தர அமலாக்கப் பிரிவு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும் சிதம்பரத்தை ஜாமீனில் விடுதலை செய்தால் சாட்சியங்களை கலைத்துவிடுவார் எனவும் அமலாக்கப் பிரிவு தரப்பு வாதிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர்.