அயோத்தி வழக்கு- அக்.17க்குள் அனைத்து வாதங்களையும் நிறைவு செய்ய வேண்டும்- உச்சநீதிமன்றம்
Recommended Video
டெல்லி: அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் அனைத்து வாதங்களையும் அக்டோபர் 17-ந் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்து 2010-ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராம் லல்லா, நிர்மோனி அகாடா மற்றும் வக்ஃபு வாரியம் ஆகிய மூன்றும் அயோத்தி நிலத்தை சரிசமமாக பங்கிட வேண்டும் என்பது அத்தீர்ப்பு.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் நாள்தோறும் விசாரித்து வருகிறது.
இவ்வழக்கில் அனைத்து தரப்பும் அக்டோபர் 18-ந் தேதிக்குள் வாதங்களை நிறைவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது இவ்வழக்கில் ஒருநாள் முன்னதாகவே அக்டோபர் 17-ந் தேதிக்குள் அனைத்து தரப்பும் வாதங்களை நிறைவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நவம்பர் மாதம் ஓய்வு பெற உள்ளார். அவர் ஓய்வு பெறுவதற்குள் இவ்வழக்கில் தீர்ப்பு அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.