பிற மொழிகளிலும் தீர்ப்பு.. சுப்ரீம் கோர்ட் சூப்பர் உத்தரவு.. எல்லாம் சரி.. ஆனால் தமிழை காணோமே!
தமிழ் மொழியை தவிர 5 மொழிகளில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் வெளியாக உள்ளது
Recommended Video
டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்புகளை பிற மாநிலங்களில் வழங்க போவதாக சொல்லிவிட்டு, தமிழை தவிர பிற மொழிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஒரு விஷயத்தை பற்றி ஆழமாக பேசியதுடன், அது சம்பந்தமான கோரிக்கையும் விடுத்திருந்தார்.
"இதுநாள் வரை ஆங்கிலத்தில் மட்டுமே நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தன. இனி, மாநில மொழிகளிலும் அந்த தீர்ப்புகள் வெளியிடப்படவேண்டும்' என்பதுதான் அது.
யதார்த்த உண்மை
ராம்நாத் கோவிந்த் பேசிய பேச்சின் யதார்த்தம், மற்றும் அவசியத்தை உணர்ந்த மத்திய அரசு, அதற்கான முயற்சியையும் எடுத்து வந்தது. அதன்படி எந்தெந்த மொழிகளில் தீர்ப்புகள் வெளியிடப்படலாம் என்பது சம்பந்தமான ஒரு பட்டியலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் எங்கே?
ஆங்கிலம் தவிர, இந்தி, தெலுங்கு, கன்னடம், அசாமிஸ், ஒடியா ஆகிய ஐந்து மொழிகளிலும் தீர்ப்பை பதிவேற்றம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முதல் பட்டியலில் இந்தியாவின் மூத்த மொழியான தமிழ் இடம் பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் பிறந்த தெலுங்கு, கன்னடம் மொழிகள் இருக்கும்போது, தொன்மையான தமிழ் மொழியை காணோம்.
பிரதமர் மோடி
போன வருஷம் இதே மோடி, தமிழ் போல மொழி உண்டா, தமிழ் மொழி பழமையானது என்று மன்கிபாத்தில் உரையாற்றினார். எல்லாமே காத்தோடு காத்தாக போய்விட்டதா என தெரியவில்லை. வழக்குத் தொடுப்பவர்களுக்கு எளிதாக மொழி புரிவதற்காக இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக காரணம் சொல்லும் அரசு, தமிழை மட்டும் பரிசீலிக்காதது ஏனோ?
அடுத்த லிஸ்ட்
இதை பற்றி கேட்டால், இது முதல்பட்டியல்தான், விரைவில் மற்ற மொழிகளிலும் தீர்ப்புகள் வெளியாக ஏற்பாடுகள் செய்யப்படும் என்று விளக்கம் சொல்கிறார்கள். இந்த அறிவிப்பு இன்னும் 10 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.
பெருமை
உலக வரலாற்றில் முதன்முறையாக ஒரு நாட்டின் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு 5-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக போகிறது என்பதை நினைத்து பெருமைப்படுவதா, அல்லது முதல் லிஸ்ட்டிலேயே தமிழை காணோமே என்று கவலைப்படுவதா என தெரியவில்லை.