ராஜினாமா செய்த கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏக்களை சட்டசபைக்கு அழைப்பது எப்படி சரி? முகுல் ரோத்தகி
டெல்லி: கர்நாடகாவில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை கொறடா உத்தரவின் அடிப்படையில் சட்டசபைக்கு வரவழைப்பது சரியல்ல என மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிட்டார்.
கர்நாடகாவில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் அரசுக்கு எதிராக 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். ஆனால் எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை.
ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் முடிவு செய்திருக்கிறார். இதனை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடினார், அவரது வாதம்:
கர்நாடகா எம்.எல்.ஏக்கள் ராஜினாமா- சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- தலைமை நீதிபதி கோகய்
ராஜினாமா ஏற்காமல் இழுத்தடிப்பு
உமேஷ் யாதவ் எம்.எல்.ஏ. ராஜினாமாவை மார்ச் 20-ந் தேதி சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். அதேபோல இந்த எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவையும் சபாநாயகர் ஏற்க வேண்டும்.
உரிமையை பறிக்க கூடாது
எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்று சொல்லவில்லை. அதை சபாநாயகர் செய்யலாம். நான் எம்.எல்.ஏ.வாகவே இருக்க விரும்பவில்லை என்கிறார் ஒருவர். அது தமது உரிமை என்கிறார். அந்த உரிமையை சபாநாயகர் பறிப்பது எப்படி சரியாகும்?
கட்டாயப்படுத்துவது ஏன்?
தகுதி நீக்கத்தை எதிர்த்து எத்தனை எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர் என கணக்குப் பார்த்தாலே கர்நாடகா அரசு வீட்டுக்குத்தான் போக வேண்டும். நான் எம்.எல்.ஏவாக இருக்கவே விரும்பாத போது நம்பிக்கை வாக்கெடுப்புக்காக கொறடா உத்தரவை மதித்து சட்டசபைக்கு ஏன் செல்ல வேண்டும்? என வாதிட்டார் முகுல் ரோத்தகி.
2-வது நோட்டீஸ்
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை எதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என கேள்வி எழுப்பினார். இதனை அடுத்து வாதத்தை தொடர்ந்த முகுல் ரோத்தகி, ஏற்கனவே தகுதி நீக்க விளக்கம் கோரி அனுப்பப்பட்ட நோட்டீஸ் விவகாரம் முடிவுக்கு வரவில்லை. இப்போது 2-வது முறையாக மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விரைந்து முடிவெடுக்க வேண்டும்
ராஜினாமா கடிதங்களை ஏற்காமல் தகுதி நீக்கம் செய்வது சரியானது அல்ல. அரசியல் சாசனத்தின் 190-வது பிரிவின் கீழ் எம்.எல்.ஏ.வின் ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டால் அதன் மீது விரைவாக முடிவெடுக்க வேண்டும். அந்த ராஜினா முடிவை தாமதப்படுத்தக் கூடாது.
தகுதி நீக்கம் என்பது இதுதான்
ஒரு எம்.எல்.ஏ. இன்னொரு கட்சிக்கு தாவும்போதுதான் தகுதி நீக்கம் செய்ய முடியும். ஒரு எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் செய்யப்பட்டால் இடைத்தேர்தலுக்காக அவர் காத்திருக்கவும் வேண்டும். ஊடகங்களில் நாங்கள் ராஜினமா செய்துவிட்டேன் என கதறுகின்றனர். அதன்பின்னரும் அவர்கள் எம்.எல்.ஏக்கள் என சொல்வது வேதனை தருகிறது. ஆகையால் ராஜினாமாக்கள் மீது சபாநாயகர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றார்.