முல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்தும் இடம்: கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையில் உத்தரவை மீறி வாகன நிறுத்தும் இடத்துக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் கேரளா அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் கேரளா அரசு வாகன நிறுத்தும் இடம் என்கிற பெயரில் புதிய ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்திருந்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், வானக நிறுத்தும் இடம் என்கிற பெயரில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்திருந்தது. இத்தடையை மீறி கேரளா கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது.
உச்சநீதிமன்றத்தில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது கேரளா அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கபட்டிருக்கிறது; அதையும் மீறி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறீர்கள்..அப்படியானால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க மாட்டீர்களா? என கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறீர்கள்...வாகன நிறுத்தும் இட கட்டுமானப் பணி என்கிற பெயரில் எத்தனை கட்டுமான பணிகளை மேற்கொள்வீர்கள்? இது தொடர்பாக 15 நாட்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.