உ.பி. பாஜக அரசு மீது உச்சநீதிமன்றம் பாய்ச்சல்- செய்தியாளர் கனோஜியாவை உடனே விடுதலை செய்ய உத்தரவு!
டெல்லி: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்ததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செய்தியாளர் கனோஜியாவை உடனே விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும் உத்தரப்பிரதேச பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலகத்துக்கு சென்று திரும்பிய பெண் ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தாம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்ய விரும்புவதாக செய்தியாளர்களிடம் கூறினார்.
இதை தமது ட்விட்டர் பக்கத்தில்
Ishq chupta nahi chupaane se yogi ji pic.twitter.com/dPIexKheou
— Prashant Jagdish Kanojia (@PJkanojia) June 6, 2019
'ப்ரீலேன்ஸ்' செய்தியாளர் பிரசாந்த் கனோஜியா வீடியோவாக வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பிரசாந்த் கனோஜியா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதையடுத்து டெல்லி வீட்டில் இருந்த பிரசாந்த் கனோஜியாவை உ.பி. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் சர்ச்சைக்குரிய பெண்ணின் பேட்டியை ஒளிபரப்பிய டிவி சேனலின் தலைமை செய்தியாளர் ஈஷிகாசிங், செய்தி ஆசிரியர் அணுஜ் சுக்லா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக டெல்லியில் பத்திரிகையாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பிரசாந்த் கனோஜியா கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறை பெஞ்ச் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி ஆகியோர் உத்தரப்பிரதேச அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், அவதூறு வழக்குக்காக 11 நாட்கள் சிறையில் அடைப்பதா? இது நேர்மையான நடவடிக்கை இல்லை எனவும் சாடினர் நீதிபதிகள். ட்விட்டரில் பதிவிட்ட ஒரு காரணத்துக்காகவே கனோஜியாவை சிறையில் அடைத்தது சரி அல்ல என்றும் விமர்சித்தனர் நீதிபதிகள். அத்துடன் கனோஜியாவை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.