யுபிஎஸ்சி தேர்வு.. இஸ்லாமியர்களுக்கு எதிரான சுதர்ஷன் டிவி நிகழ்ச்சி.. சுப்ரீம் கோர்ட் அதிரடி தடை!
டெல்லி: சுதர்ஷன் டிவி என்ற இந்தி செய்தி சேனலில் வெளியான இஸ்லாமியர்களுக்கு எதிரான நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்ப உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
சுரேஷ் சாவ்காங்கே என்ற செய்தியாளர் மூலம் தொடங்கப்பட்ட இந்தி சேனலான சுதர்ஷன் டிவி தற்போது நாடு முழுக்க பெரும் பரபரப்பையும், எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. இந்த சேனலில் சுரேஷ் சாவ்காங்கே தொகுத்து வழங்கிய ''பின்டாஸ் போல்'' என்ற நிகழ்ச்சிதான் இந்த சர்ச்சைக்கு காரணம்.
இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் சுரேஷ் , இந்தியாவில் இருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற ஆட்சி பணிகளில் இசுலாமியர்கள் முறைகேடு செய்கிறார்கள். ஆட்சி பணிகளை பிடிக்க இவர்கள் ஜிஹாத் செய்து வருகிறார்கள் என்று குறிப்பிட்டார் . அதோடு இஸ்லாமியர்களை மோசமாக விமர்சித்தும், இஸ்லாமிய ஆட்சி பணி அதிகாரிகளை இழிவாக பேசியும் இருந்தார்.
இந்த நிகழ்ச்சியின் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரிய அளவில் எதிர்ப்புகளை சந்தித்தது. இந்த நிலையில் சுதர்ஷன் டிவி சேனலில் வெளியான இஸ்லாமியர்களுக்கு எதிரான அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப உச்ச நீதிமன்ற தடை விதித்து உள்ளது. நீதிபதிகள் டிஒய் சந்திரசூட், கேஎம் ஜோசப், இந்து மல்ஹோத்ரா அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.
இந்த நிகழ்ச்சி நஞ்சை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. யுபிஎஸ்சி தேர்வுகளை இழிவுபடுத்தி கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் உள்ளது. ஒரு மதத்தை இழிவுபடுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி உள்ளது. இதை விட பெரிய விஷத்தனம் எதுவும் இல்லை. இது போன்ற நிகழ்ச்சிகளை அனுமதிக்க முடியாது.
எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் யுபிஎஸ்சி தேர்வு நடக்கிறது. இதில் மதம் சார்ந்து எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது ஒரு மதம் மீது குற்றச்சாட்டுவது மிகவும் தவறு, என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதற்கு சுதர்ஷன் டிவி தரப்பு, இந்தியாவின் பாதுகாப்பு கருதியும், தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பினோம் என்று கூறப்பட்டது.
ஆனால் இதை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சி இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் வகையில் உள்ளது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். அதனால் இந்த நிகழ்ச்சியின் மீதம் இருக்கும் 7 எபிசோட்களை ஒளிபரப்ப தற்காலிக தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். அதோடு மத்திய அரசு சார்பாக ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், செய்தி சேனல்களின் ஷேர் விவரங்கள், பங்கு வர்த்தக விவரங்களை பொதுவில் வெளியிடுவது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும்.
இதில் விவாதங்களில் கலந்து கொள்ளும் நபர்களின் கருத்து உரிமை காக்கப்பட வேண்டும். செய்தி சேனல்கள் சுதந்திரமாக செயல்படுகிறதா, எல்லா கருத்துக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறதா என்று ஆராய வேண்டும், என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்த வழக்கு, வழக்கறிஞர் பிரோஸ் இஃபால் கான் என்பவர் மூலம் தொடுக்கப்பட்ட வழக்கு ஆகும். கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆவதற்கு முன் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.