மணிப்பூர் வழக்கு: சபாநாயகருக்கான அதிகாரங்கள்... நாடாளுமன்றம் பரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் சபாநாயகருக்கான அதிகாரங்கள் தொடர்பாக நாடாளுமன்றம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2017-ல் மணிப்பூர் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்றது. 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில் ஆட்சி அமைக்க 31 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.
இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 24 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை கட்சியானது. இருப்பினும் 21 இடங்களில் வென்ற பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரியது.
இதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. சியாம் குமார் ஆதரவு அளித்தார். பின்னர் அவர் பாஜகவிலேயே இணைந்தார். இதனால் சியாம் குமாரை தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகர் கேம்சந்த் சிங்கிடம் காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர்.
ஆனால் சபாநாயகரோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பான வழக்கில் உத்தரவு எதனையும் பிறப்பிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்தது. இதனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சி.ஏ.ஏ.வுக்கு எதிரான 144 மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுதாரர்கள் சபாநாயகரை மீண்டும் நாட வேண்டும். அவர் 4 வரங்களில் முடிவு எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என தீர்ப்பு அளித்தனர்.
அத்துடன் சபாநாயகர் என்பவரும் ஒரு கட்சியை சேர்ந்தவர். இதுபோன்ற தகுதி நீக்கம், கட்சி தாவல் விவகாரங்களில் சபாநாயகரின் முடிவெடுக்கும் அதிகாரம் தொடர்பாக நாடாளுமன்றம் பரிசீலிக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.