உச்சநீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு விசாரணை தொடங்கியது!
Recommended Video
டெல்லி: சர்ச்சைக்குரிய அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி கட்ட விசாரணயை இன்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் பெஞ்ச் தொடங்கியுள்ளது. இந்த விசாரணை நாள்தோறும் நடைபெறும்.
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் பாபர் மசூதியை இந்துத்துவா அமைப்பினர் 1992-ல் இடித்து தரைமட்டமாக்கினர். இது தொடர்பாக சன்னி வக்ஃபு வரியம், நிர்மோஹி அகாடா உள்ளிட்ட அமைப்புகள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இதனை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ல் ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாடா மற்றும் ராம் அல்லா அமைப்புகள் சரிசமமாக பகிர்ந்து கொள்ள உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சந்திரசூட், அசோக் பூஷண், போப்டே மற்றும் அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் நீதிபதி கலிபுல்லா தலைமையில் சமரச குழு ஒன்றையும் உச்சநீதிமன்றம் அமைத்தது.
ஆனால் இக்குழுவின் சமரச முயற்சிகள் தோல்வி அடைந்ததாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனையடுத்து இன்று இவ்வழக்கில் தினசரி விசாரணைகள் தொடங்கியது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் நவம்பரில் ஓய்வு பெற உள்ளார். அத்றகு முன்னதாக இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்ற விசாரணையை நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.