பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம்... கட்டாவிட்டால் 3 மாதம் சிறை-உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒரு ரூபாயை செப்டம்பர் 15ம் தேதிக்குள் கட்ட வேண்டும் என்றும், கட்டாமல் விட்டால் 3மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஹார்லி டேவிட்ஸன் பைக்கில் அமர்ந்தவாறு கடந்த ஜூன் மாதம் ஒரு புகைப்படம் எடுத்திருந்தார். அந்தப் படம் குறித்து பிரசாந்த் பூஷண், முகக்கவசம், ஹெல்மெட் இல்லாமல் அமர்ந்த தலைமை நீதிபதி என்று டுவிட்டரில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் விமர்சித்தார். மேலும் நீதித்துறையின் செயல்பாடுகள் கடந்த 6 வருடங்களாக மாறி உள்ளதாகவும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்திருந்தார்
இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனக்கூறி அவர் மீது உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என கடந்த 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன் பிராசந்த் பூஷண் மன்னிப்பு கேட்க 3 நாட்கள் அவகாசத்தை நீதிபதிகள் அளித்தார்கள்.
பிரசாந்த் பூஷண் மறுப்பு
ஆனால், 24-ம் தேதி விசாரணைக்கு மீண்டும் இந்த வழக்கு வந்த போது, தன்னுடைய கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி பிரசாந்த் பூஷண் கூறினார். இதனால் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கான தண்டனை குறித்த தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
பாவகாரியமா மன்னிப்பு
அப்போது நீதிபதி அருண் மிஸ்ரா, "மன்னிப்புக் கேட்பதால் என்ன தவறு இருந்துவிடப் போகிறது. மன்னிப்புக் கோருவது பாவகாரியமா. அல்லது குற்றம் செய்ததை வெளிக்காட்டுமா.'' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
தண்டனை விவரம்
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கான என்ன தண்டனை என்ற விவரத்தை உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, நீதிபதிகள் பிஆர் கவே, கிருஷ்ணா முராரி ஆகியோர் கொண்ட அமர்வு தண்டனை விவரங்களை அறிவித்துள்ளது.
3 மாதம் சிறை
வழக்கமாக பிரசாந்த் பூஷனுக்கு அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்தும் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று தண்டனை விவரத்தை அறிவித்த நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷனுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். செப்டம்பர் 15ம் தேதிக்குள் கட்டாவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் அத்துடன் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றவும் தடை விதிக்கப்படும் என்று தீர்ப்பளித்தனர்.