ரபேல் விமான கொள்முதல் வழக்கு.. மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி
Recommended Video
டெல்லி: ரபேல் போர் விமானங்கள் வாங்கியது பற்றி சிபிஐ விசாரணை தேவை என்று கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்திய விமானப்படைக்காக பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடியில் வாங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016-ம் ஆண்டு ஜனவரியில் ஒப்பந்தம் செய்தது.
இந்த ஒப்பந்தத்தில், விமானத்தின் விலையை நிர்ணயம் செய்ததில் இருந்து, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு பிரதமர் மோடிக்கு நெருக்கமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது வரை ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.
விசாரணை
இந்நிலையில் ரபேல் போர் விமான பேரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, நீதிமற்த்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
தள்ளுபடி
இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடந்திருப்பதற்கு ஆதாரம் இல்லை என கூறி, அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
முன்னாள் அமைச்சர்கள்
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷண், வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங் ஆகியோர் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்தனர்.
மனுவில் கோரிக்கை
அந்த மனுக்களில் ரபேல் போர் விமான விவகாரத்தில் மத்திய அரசு முற்றிலும் தவறான தகவலை அளித்துள்ளது என்றும் எனவே தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது.
சீராய்வு மனுக்கள் தள்ளுபடி
இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரைக்கொண்ட அமர்வு விசாரனை நடத்தியது. அனைத்துதரப்பு வாதம் முடிந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மே மாதம் 10-ந் தேதி உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில் 6 மாதங்களுக்கு பின்னர் ரபேல் மறு ஆய்வு மனுக்கள் மீது இன்று (வியாழக்கிழமை) உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. இதன்படி ரபேல் போர் விமானங்கள் வாங்கியது பற்றி சிபிஐ விசாரணை தேவை என்று கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.