9 மாவட்டங்களில் 4 மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: தமிழகத்தில் தற்போது 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த 9 மாவட்டங்களிலும் 4 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், அனைத்து மாவட்டங்களிலும் வார்டுகள் முறையாக மறுவரையறை செய்த பின்னரே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது வார்டு வரையறை பணிகள் நிறைவு பெறாமல் எப்படி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தனர். இதனால் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தேர்தலை ஒத்திவைக்க மாநில தேர்தல் ஆணையம் தயார் என கூறியது.
இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதித்தது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தற்போது தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் இந்த 9 மாவட்டங்களிலும் வார்டுகளை வரையறை செய்து 4 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கவும் உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.