ஒரே வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பான வழக்கு- ஆகஸ்டில் இறுதி விசாரணை
டெல்லி: ஒரே வேட்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கின் இறுதி விசாரணை அடுத்த மாதம் வரவுள்ளது.
ஒரு வேட்பாளர் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 33 (7)-ஆவது பிரிவின்படி இரு தொகுதிகளில் பொதுத் தேர்தலிலும், இடைத் தேர்தலிலும் அல்லது சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிடலாம் என அனுமதிக்கிறது. ஆனால், அதே சட்டத்தின் 70-ஆவது பிரிவு அவ்வாறு போட்டியிடும் நபர் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் ஒரு தொகுதியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கிறது.
இந்நிலையில் ஒரே நபர் இரு தொகுதிகளில் போட்டியிட அனுமதிப்பது, அரசமைப்புக்கு எதிரானது கூறி பாஜகவின் செய்தித் தொடர்பாளரும், வழக்குரைஞருமான அஸ்வினி உபாத்யாய, உச்சநீதிமன்றத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் தேர்தல் ஆணையமும் பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில் ஒரு நபர் ஒரு தொகுதியில் போட்டியிடும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் கடந்த 2004, 2016 ஆகிய ஆண்டுகளில் மத்திய அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பியுள்ளன.
இது தொடர்பாக மத்திய அரசுதான் செயலாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் மனுவில் கூறப்பட்டிருந்தது. இதற்கு மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பதில் மனுவில் ஒரு நபர் இரு தொகுதிகளில் போட்டியிட அனுமதிப்பது ஜனநாயகபூர்வமானதுதான் என்றும் மனுதாரர் அஸ்வினி உபாத்யாய இது தொடர்பாக வாக்காளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பாக எதுவும் அவரது மனுவில் தெரிவிக்கவில்லை.
எனவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை திருத்துமாறு நீதிமன்றத்தை கேட்கக் கூடாது என மத்திய அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.