ஜல்லிக்கட்டு நடத்த நீதிபதி தலைமையில் குழு அமைத்ததற்கு எதிராக வழக்கு- உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
டெல்லி: தமிழகத்தில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை முறையாக நடத்த நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டதற்கு எதிராக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்களின் சரித்திர புரட்சியை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் சுமூகமாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு அவனியாபுரத்தில் நாளையும் பாலமேட்டில் நாளை மறுநாளும் அலங்காநல்லூரில் 17-ந் தேதியும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு, காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவு, கேலரிகள் அமைத்தல், பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடும் அதிருப்தியில் திமுக... சோனியா காந்தியுடன் கே.எஸ். அழகிரி திடீர் சந்திப்பு
புதிய வழக்கு
இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான குழுக்களையும் மதுரை மாவட்ட ஆட்சியர் அமைத்திருந்தார். ஆனால் மாவட்ட ஆட்சியர் அமைத்த குழுவில் அனைத்து ஜாதியினரையும் சேர்க்க வேண்டும்; அருந்ததியினரை குழு உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பல வழக்குகள் தொடரப்பட்டன.
நீதிமன்றம் உத்தரவு
இவ்வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் கொண்ட பெஞ்ச், ஜல்லிக்கட்டுக்கான குழுக்கள் தொடர்பான விரிவான உத்தரவுகளை பிறப்பித்தது. ஜல்லிக்கட்டு குழுக்களை ஒருங்கிணைக்கும் தலைவராக நீதிபதி மாணிக்கம் நியமிக்கப்பட்டார்.
வழிகாட்டுதல்கள்
மேலும் ஜல்லிக்கட்டு காளைகள், உரிமையாளர்கள் என யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது; தற்போதைய குழுக்கள் அனைத்தும் தற்காலிகமானதுதான்; விலங்குகள் நல வாரிய விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. ஒருங்கிணைப்பு குழுக்களின் கீழ் அறிவுரைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வழங்கப்பட்டன.
பாலமேடு குழு
பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மட்டும் மகாலிங்கசுவாமி மடத்து கமிட்டி நடத்தலாம்; அதே நேரத்தில் நீதிபதி மாணிக்கம் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கண்காணிக்கும். என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
குழுக்களுக்கு எதிராக வழக்கு
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு குழுக்களை அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஏ.கே. கண்ணன் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டை தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் நடத்தி வந்த நிலையில் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது ஏற்புடையது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.