ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி யு.யு. லலித் விலகல்
டெல்லி: ஆந்திரா முதல்வர் பதவியில் இருந்து ஜெகன் மோகன் ரெட்டியை நீக்க கோரும் பொதுநலன் மனுக்கள் மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி யு.யு. லலித் தெரிவித்திருக்கிறார். இதனால் இந்த வழக்கு வேறு பெஞ்ச் விசாரணைக்கு மாற்றப்பட உள்ளது.
ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டேவுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான பி.வி. ரமணா மீது பல்வேறு புகார்களை தெரிவித்திருந்தார்.
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து என்.வி. ரமணா செயல்படுகிறார் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளையும் ஜெகன் மோகன் ரெட்டி அந்த கடிதத்தில் கூறியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
நீதிமன்றத்துக்கு அவமதிப்பு
இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக வழக்கறிஞர்கள் ஜிஎஸ் மணி, பிரதீப் குமார் மற்றும் எஸ்.கே. சிங் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகளைத் தாக்கல் செய்தனர். அதில், நீதிமன்றத்தின் மரபுகளை அவமதிக்கும் வகையில் செயல்படுகிறார் ஜெகன் மோகன் ரெட்டி; அன்னிய செலாவணி மோசடி உட்பட 20-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டிருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
உச்சநீதிமன்றத்தில் பணியில் இருக்கும் நீதிபதி என்.வி. ரமணா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி. பொதுமக்களிடம் நீதித்துறைக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டிருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி.
ஜெகனை நீக்க வேண்டும்
ஆகையால் அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து ஜெகன் மோகன் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை
உச்சநீதிமன்ற நீதிபதி உதய் உமேஷ் லலித் (யு.யு.லலித்) தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெகன் மோகன் ரெட்டிக்காக பல வழக்குகளில் தாம் ஆஜராகி இருந்ததால் இப்போது இந்த வழக்கில் இருந்து விலகுவதாகவும் வேறு பெஞ்சுக்கு இந்த வழக்கை மாற்ற பரிந்துரைப்பதாகவும் நீதிபதி யு.யு. லலித் தெரிவித்தார்.