குடியரசு தினத்தில் விவசாயிகளின் 1 லட்சம் டிராக்டர் பேரணி- உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
டெல்லி: டெல்லியில் குடியரசு தினத்தில் விவசாயிகள் நடத்தும் 1 லட்சம் டிராக்டர் பேரணிக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளை நடைபெறுகிறது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடனான அனைத்து கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.
உச்சநீதிமன்றமும் மத்திய அரசின் விவசாய சட்டங்களை செயல்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளது. அதேநேரத்தில் 4 பேர் கொண்ட வல்லுநர் குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்தது. ஆனால் இந்த 4 பேரும் விவசாய சட்டங்களை ஆதரிப்பவர்கள் என்பதால் இக்குழுவை விவசாயிகள் ஏற்கவில்லை.
மேலும் இக்குழுவில் 3 பேரை நீக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் விவசாயிகள் சங்கத்தினர் மனுத்தாக்கல் செய்தனர். அத்துடன் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் 1 லட்சம் டிராக்டர்களில் பேரணி நடத்துவோம் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இதற்காக பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டர்களில் புறப்பட்டுள்ளனர். இந்த டிராக்டர் பேரணிக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் டெல்லி போலீசார் மனுத் தாக்கல் செய்துள்ளனர். குடியரசு தினநாளில் டெல்லியில் எந்த இடத்திலும் எந்த ஒரு போராட்டத்துக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்பது டெல்லி போலீசின் மனு.
பிரதமர் மோடியுடன் ஜன.19-ல் சந்திப்பு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
இம்மனு மீதும் வல்லுநர் குழுவில் 3 பேரை நீக்க கோரும் மனு மீதும் உச்சநீதிமன்றத்தில் நாளை திங்கள்கிழமையன்று விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையின் முடிவில் ஜனவரி 26-ந் தேதி போராட்டம் தொடர்பான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.