ரஃபேல் போர் விமான கொள்முதல் வழக்கு: மறு ஆய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு
Recommended Video
டெல்லி: ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு செய்த மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.
பிரான்ஸிடம் இருந்து இந்தியா 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை கோரி பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி இம்மனுக்களை தள்ளுபடி செய்தது.
மேலும் ரஃபேல் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தும் முறையில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அத்துடன் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை பிரான்ஸின் டஸ்ஸோ நிறுவனத்தின் இந்திய பங்குதாரராக சேர்த்ததிலும் முறைகேடு உள்ளது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை; போர் விமானங்களை அரசு வாங்குவது தொடர்பான முடிவில் தலையிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் மறு ஆய்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.
ரஃபேல் போர் விமான கொள்முதல் வழக்கின் பின்னணி
2007- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ல் 126 போர் விமானங்களுக்கான முன்மொழிவை அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளியிட்டது. இதில் பிரான்ஸின் டஸால்ட் உட்பட 6 சர்வதேச நிறுவனங்கள் தங்களது விலையை முன்வைத்தன.
இதில் டஸால்ட் நிறுவனம் குறைவான விலையை முன்வைத்திருந்ததால் 2012-ல் அந்நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் ரூ54,000 கோடி மதிப்பில் 126 விமானங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது; மேலும் 16 விமானங்கள் பிரான்ஸில் தயாரிக்கப்பட்டு பறக்க தயாரான நிலையில் இந்தியாவிடம் வழங்கப்படும்; எஞ்சிய 108 போர் விமானங்கள் டஸால்ட் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
இருப்பினும் இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததால் இறுதியாகாமல் இருந்தது. 2014ல் பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு பதவியேற்றது.
2015-ல் பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, முழுமையாக தயாரிக்கப்பட்டு பறக்க தயாரான நிலையில் 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கும் என அறிவித்தார்.
2016-ம் ஆண்டு செப்டம்பர் 23-ல் ரூ60,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில் விமானத்தின் விலை விவரங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை; உதிரிபாகங்களை தயாரிக்கும் ஒப்பந்தம் ரிலையன்ஸின் டிபன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது போன்றவை சர்ச்சைகளாகின. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டன.