நுபுர் சர்மாவுக்கு எதிரான அனைத்து வழக்குகள் டெல்லி போலீசுக்கு மாற்றம்-உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
டெல்லி: இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதால் பாஜகவின் முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் டெல்லி போலீசுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நபிகள் நாயகம் தொடர்பாக டிவி விவாதம் ஒன்றில் அவதூறாக பேசினார் நுபுர் சர்மா. அவரது இந்த கருத்து சர்வதேச பிரச்சனையாக உருவெடுத்தது. பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மாவின் இந்த கருத்துக்கு மத்திய அரசுதான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தின.
இதனையடுத்தே பாஜகவில் இருந்து நுபுர் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதேநேரத்தில் நுபுர் சர்மா கருத்தை முன்வைத்து கான்பூர் உள்ளிட்ட இடங்களில் வன்முறைகள் வெடித்தன. நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. ராஜஸ்தானில் நுபுர் சர்மா ஆதரவாளர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தம் மீது நாட்டின் பல மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்கை டெல்லிக்கு மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் நுபுர் சர்மா ஒரு மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், நுபுர் சர்மா டிவியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; நாடு முழுவதும் நடைபெறும் வன்முறைகளுக்கு நுபுர் சர்மாவே பொறுப்பு என கடுமையாக சாடியது. இதனை எதிர்த்தும் மனுத் தாக்கல் செய்திருந்தார் நுபுர் சர்மா.
மேலும் நுபுர் சர்மாவை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடையும் விதித்திருந்தது. இந்த நிலையில் நுபுர் சர்மாவுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் டெல்லி போலீசுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதனால் நுபுர் சர்மா தரப்பு சற்று நிம்மதி அடைந்துள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்றவர் நுபுர் சர்மா. பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி சார்பில் போட்டியிட்டு 2008ல் பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவரானார். 2008-ல் டெல்லி பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் கிலானி பங்கேற்ற போது அவருடன் கை கலப்பில் ஈடுபட்டவர் நுபுர் சர்மா. இதையடுத்து பாஜகவில் முக்கியத்துவம் பெற்றார் நுபுர் சர்மா. 2015-ல் டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.பின்னர் டெல்லி பாஜகவின் முகமாக இருந்தார் நுபுர் சர்மா.