ஞானவாபி மசூதி வழக்கு: நாளைதான் விசாரணை.. உச்ச நீதிமன்றம்.. வாரணாசி கோர்ட் விசாரிக்கவும் கட்டுப்பாடு
டெல்லி: ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றமும், வாரணாசி நீதிமன்றமும் இரண்டு வெவ்வேறு விசாரணைகளை நடத்துகிறது. கடந்த முறை இந்த வழக்கில், ஞானவாபி மசூதியில் லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படும் பகுதியை சீல் செய்யவும், இஸ்லாமியர்களை தொடர்ந்து அங்கு வழிபாடு செய்ய அனுமதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. வாரணாசி கோர்டில் நடக்க இருந்த இன்னொரு விசாரணையையும் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது, இதில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றமும், வாரணாசி நீதிமன்றமும் இரண்டு வெவ்வேறு விசாரணைகளை நடத்துகிறது. கடந்த முறை இந்த வழக்கில், ஞானவாபி மசூதியில் லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படும் பகுதியை சீல் செய்யவும், இஸ்லாமியர்களை தொடர்ந்து அங்கு வழிபாடு செய்ய அனுமதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஞானவாபி மசூதி வழக்கு என்பது இப்போது திடீரென எழுந்த வழக்கு கிடையாது. 1991ல் இருந்து இந்த பிரச்சனை உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த இந்து மக்கள், பல்வேறு இந்து பிரிவினர் ஞானவாபி மசூதி என்பது அருகில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு 1669ல் கட்டியதாக கூறினர்.
கியான்வாபி மசூதி! மக்கள் வாழ்வை சீர்குலைத்து அதை திசைதிருப்ப மதப்பிரச்சனை! மோடி அரசு மீது மமக சாடல்!
பின்னணி
காசி விசுவநாதர் கோவிலில் ஒரு இடத்தில் நந்தி உள்ளது. அந்த நந்தி ஞானவாபி மசூதியை நோக்கி இருக்கிறது. நந்தி பொதுவாக சிவன் சிலையை, மூலவரை நோக்கித்தான் இருக்கும். இதனால் ஞானவாபி மசூதிக்குள் சிவன் சிலை இருப்பது உறுதி என்று இந்துத்துவா அமைப்பினர் கூறி வருகின்றனர் . இங்கு இருக்கும் மசூதியை இடிக்கவும், அங்கு உடனே இந்து வழிபாட்டு உரிமையை நிலைநாட்டவும் வேண்டும் என்று இந்துக்கள் சார்பாக அப்போது தொடுக்கப்பட்ட வழக்கை அலஹாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வழிபாடு
இந்த நிலையில்தான் இப்போது இதில் புதிய வழக்கு போடப்பட்டு உள்ளது. அதன்படி ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுற்றுச்சுவர் அருகே இந்து கடவுள்களின் சிலைகள் உள்ளன. அம்மன் சிலைகள், ஹனுமான், நந்தி சிலைகள் உள்ளன. இங்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டும்.. நவராத்திரியின் 4வது நாளின் போது மட்டும் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்படும். இந்துக்கள் இங்கு வெளிப்புற சுவர் அருகே வழிபாடு நடத்துவார்கள். இந்த நிலையில் இங்கு எல்லா நாளும் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி, 5 பெண்கள் வாரணாசி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
5 பெண்கள் வழக்கு
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 5 இந்து பெண்கள் மூலம் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. அதோடு இந்த சிலைகளுக்கு எதுவும் சேதம் ஏற்பட கூடாது என்றும் வழக்கில் அவர்கள் குறிப்பிட்டனர். இந்த வழக்கில் வாரணாசி கோர்ட் உத்தரவில், மசூதியில் சர்வே நடத்தும்படி அகழ்வாராய்ச்சி சர்வே அமைப்பிற்கு உத்தரவிட்டது. அதோடு இதை வீடியோவாக சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்டது. இதை எதிர்த்து உத்தர சன்னி வகுப்பு போர்ட் இயக்குனர் அஞ்சுமான் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
சர்வே உத்தரவு
ஆனால் வாரணாசி கோர்ட் உத்தரவை அலஹாபாத் கோர்ட் தடை செய்ய மறுத்துவிட்டது. அதோடு இந்த சர்வே முடிவுகளை சீலிட்டு கோர்டில் சமர்ப்பிக்க வேண்டும். அதை பற்றி வெளியே தகவல் தெரிவிக்க கூடாது என்று கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது. இதையடுத்து உள்ளே வீடியோ சர்வே எடுக்கும் பணிகள். நடந்தன. இந்த வழக்கில் சர்வே பணிகளை மேற்பார்வை செய்த அஜய் மிஸ்ரா என்ற வழக்கறிஞரின் போட்டோகிராபர் மூலம் அங்கு சிவலிங்கம் இருந்ததாக சொல்லப்படும் பகுதியின் புகைப்படம் லீக் ஆனது.
மேல்முறையீடு
இதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று அஜய் மிஸ்ரா விளக்கம் அளித்தார். ஆனாலும் சர்வே கமிட்டியில் இருந்து அவர் நீக்கப்பட்ட நிலையில், புதிய நிர்வாகிகளின் சர்வே முடிவுகள் இன்னும் 2 நாட்களில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் இங்கே சர்வே எடுக்க அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மசூதி கமிட்டி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் இந்து அமைப்புகள் வைத்த வாதத்தில், உள்ளே சிவலிங்கம் இருந்ததாக குறிப்பிட்டனர்.
விளக்கம்
இதையடுத்து உச்ச நீதிமன்றம் சிவலிங்கம் இருந்ததாக கூறப்படும் பகுதியை சீல் செய்யும்படி கூறியது. சொன்னார்கள். அதே சமயம் இஸ்லாமியர்கள் மற்ற இடங்களில் தொடர்ந்து பாடு வழிபாடு நடத்தலாம் என்று உத்தரவிட்டது. இது தொடர்பாக ஞானவாபி மசூதி தரப்பினர் தெரிவிக்கையில், உள்ளே இருப்பது சிவலிங்கம் இல்லை. அது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாட்டர் பவுண்டைன். அதை சிவலிங்கம் என்று பொய்யாக பரப்புகிறார்கள் என்று விளக்கம் அளித்தனர்.
Recommended Video
சுப்ரீம் கோர்டில் விசாரணை
ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றமும், வாரணாசி நீதிமன்றமும் இரண்டு வெவ்வேறு விசாரணைகளை நடத்துகிறது. உச்ச நீதிமன்றத்தில் இன்று மசூதி சார்பாக இஸ்லாமியர்களின் தரப்பு வாதம் கேட்கப்பட இருந்தது. அதேபோல் இந்து அமைப்புகள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரம் மீதும் விசாரணை நடத்தப்பட இருந்தது. இது போக வாரணாசி கோர்டில், இந்துக்கள் ஞானவாபி பகுதியில் மசூதிக்குள் உள்ளே சிவலிங்கம் கிடைத்த இடத்தில் வழிபாடு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மனு, உள்ளே இருக்கும் நீர் நிலைகளை நீக்க வேண்டும் என்ற மனு, அஜய் மிஸ்ராவை மீண்டும் சர்வே பணியில் சேர்க்க வேண்டும் என்பது தொடர்பான மனு ஆகியவை குறித்த விசாரணை நடத்தப்பட இருந்தது.
ஒத்திவைப்பு
ஞானவாபி மசூதி லிங்க வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்றைய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. உச்ச நீதிபதிகள் சந்திரசூட், சூர்யா காந்த், பிஎஸ் ரநரசிம்மா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் ஹரிசங்கர் ஜெயின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நாளை விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஹரிசங்கர் ஜெயின் தரப்பு வைத்த கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு போடப்பட்டது. அப்படி என்றால் வாரணாசி கோர்ட் இடையில் எந்த உத்தரவு போட கூடாது என்று இஸ்லாமிய தரப்பினர் இதில் கோரிக்கை வைத்தனர். இதனால் வாரணாசி கோர்டில் நடக்க இருந்த இன்னொரு விசாரணையையும் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது, இதில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.