குடும்ப சொத்து...ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சமபங்கு...உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
டெல்லி: குடும்ப சொத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சமபங்கு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெண்களுக்கு சொத்தில் சமபங்கு அளிப்பது தொடர்பான வழக்கில் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.
குடும்ப சொத்தில் சமபங்கு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. 2005ஆம் ஆண்டு வாரிசு உரிமை சட்டத்தின் கீழ் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தனது தீர்ப்பில், ''பெற்றோருக்கு ஒருமுறை மகள் என்றால் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு மகள்தான். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. பூர்வீக சொத்தில் ஆணுக்கு நிகராக பெண்ணுக்கும் உரிமை உண்டு'' என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஆஹா.. விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கும் செய்தி.. மேட்டூர் அணை இப்போ எப்படி இருக்கு தெரியுமா?
வீட்டில் தங்கலாம்
பெண்களுக்கான சொத்து உரிமைகளை 1956-ல் நிறைவேற்றப்பட்ட இந்து வாரிசுச் சட்டப்படிதான் வழங்கப்பட்டு வந்தது. இதற்கு முன்னதாக 'இந்து பெண்கள் சொத்து சட்டம்' என்று இருந்தது. இதன்படி, பிறந்த வீட்டில் தங்குவதற்கு மட்டுமே உரிமை இருந்தது. சொத்தில் உரிமை கொண்டாட முடியாது. பிறந்த வீட்டில் கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே இவர்களுக்கு சொத்தாக கருதப்பட்டது.
சமபங்கு
இதையடுத்து 1956, ஜூலை 4ஆம் தேதி 'இந்து வாரிசுச் சட்டம் 1956' என்று கொண்டு வரப்பட்ட சட்டத்தில் பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உண்டு கூறப்பட்டது. ஒரு குடும்பத்தில் ஒரு ஆண்மகன், ஒரு மகள் இருந்தால், இருவருக்கும் சமமாக சொத்தில் பங்கு இருக்கிறது என்று இந்த வாரிசு சட்டம் வலியுறுத்தியது.
2005ல் புதிய திருத்தம்
முன்னர் இருந்த சட்டங்களின்படி பெற்றோர் வீட்டில் பெண்கள் பங்கு கேட்கும் உரிமை இல்லை. 2005ல் ஏற்படுத்தப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, தந்தையின் காலத்திற்குப் பின்னர் பங்கு கேட்கும் உரிமை வழங்கப்பட்டது. பெண்ணின் சீதனம் அவளது தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப்பட்டது. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் கூட அவை அவளது தனிப்பட்ட சொத்தாக கருதப்படும். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.
பூர்வீகச் சொத்து
இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பு 2005 இந்து வாரிசு திருத்த சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ளது. அந்த சட்ட திருத்தத்தில், '25.3.1989 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட ஒரு இந்து பெண் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கேட்க முடியாது. அதற்கு பின்னர் திருமணம் செய்துகொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோர உரிமை உண்டு. ஆனால்,சொத்து பாகப்பிரிவினை 25.3.1989 தேதிக்கு முன்பு செய்யப்பட்டிருந்தால் உரிமை கோர முடியாது.