மோடிக்கு எதிரான தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு.. தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
பிரதமர் மோடிக்கு எதிராக தொடுக்கப்பட்ட தேர்தல் விதிமுறை மீறல் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்த உள்ளது.
டெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக தொடுக்கப்பட்ட தேர்தல் விதிமுறை மீறல் வழக்கில் உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் தொடர்ந்து லோக்சபா தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இவர்களின் பிரச்சாரம் அவ்வப்போது விமர்சனத்தை சந்தித்து வருகிறது.
முக்கியமாக பிரதமர் மோடி ஜாதி குறித்தும், மதம் குறித்தும் வெளிப்படையாக பிரச்சாரம் செய்து வருகிறார். இவர் வெறுப்பை உமிழும் வகையில் பேசுவதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல் இந்திய ராணுவத்தை தனது பிரச்சாரத்தில் விதிகளை மீறி பயன்படுத்தி வருகிறார்.
இது அத்தனையும் தேர்தல் விதிமுறைப்படி தவறானது ஆகும். இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. தேர்தல் ஆணையம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்து இருந்தது.
ஆனால் இதுவரை பிரதமர் மோடிக்கு எதிரான புகார் மீது தேர்தல் ஆணையம் சிறிய நடவடிக்கை கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
அதே சமயம் காங்கிரஸ் சார்பாக எம்.பி சுஷ்மிதா தேவ் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நேற்று இவர் மோடியின் பேச்சு குறித்தும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது குறித்தும் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இதை விசாரித்தது. இந்த வழக்கில் சுஷ்மிதா தேவ் சார்பாக வழக்கறிஞர் ஏ.எம் சிங்வி ஆஜரானார்.
வழக்கின் முடிவில் மோடிக்கு எதிரான தேர்தல் விதிமுறை மீறல் வழக்கில் உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மோடி மீது அளிக்கப்பட்ட புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.