சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை.. எங்க கேள்வியே வேற.. உச்ச நீதிமன்றம் அதிரடி
டெல்லி: சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை என்றும் அதில் உள்ள கேள்விகளையே விசாரிக்க போகிறோம் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்து உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்டஅமர்வு தீர்ப்பு வழங்கியது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் நிலவுகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து 56 மேல்முறையீட்டு மனுக்கள் உள்ளிட்ட 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது.
உச்ச நீதிமன்றம்
விசாரணையை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாக கடந்த நவம்பர் 14ம் தேதி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. அதேநேரம் 2018ம் ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடைவிதிப்பது குறித்து எந்த உத்தரவும் உச்ச நீதிமன்றம் தெரிவிக்கவில்லை
தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே
இந்நிலையில் சபரிமலை தொடர்பான வழக்குகளை தற்போதைய தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த அமர்வில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அஷோக் பூஷண், எல்.நாகேஸ்வர ராவ், மோகன் எம்.சந்தான கவுடர், எஸ் அப்துல் நசீர், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் இடம் பெற்றனர்.
விசாரணைக்கு வந்தது
பழைய வழக்கில் இருந்து ஆர்.எப் நாரிமன், டி.ஒய். சந்திராசூட், இந்து மல்ஹேத்ரா ஆகியோர் 9 நீதிபதிகள் அமர்வில் இடம் பெறவில்லை. இந்நிலையில் சபரிமலை தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
பெண்கள் நுழைவது
அப்போது தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே, சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை என்று அறிவித்தார். அத்துடன் சபரிமலை விவகாரத்தில் விசாரிக்கப்பட வேண்டிய கேள்விகளைத் தான் விசாரிக்க இருக்கின்றோம் என்றார். கோயில் மசூதி உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களுக்குள் செல்வது வழிபாட்டு முறைகளுடன் சேர்ந்த விஷயமா என்பதை கேட்க இருக்கிறோம் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்தார்.
அனைத்து மதத்திலும்
இது வெறும் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விஷயம் அல்ல. அனைத்து மதத்திலும் இருக்க கூடிய விஷயங்களையும் விசாரிக்க இருக்கிறோம். 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு எழுப்பிய கேள்விகளை மட்டுமே விசாரிப்போம். இந்த வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய கேள்விகள் குறித்து அனைத்து தரப்பும் பதில் அளிக்க 3 வாரங்கள் அவகாசம் அளிக்கிறோம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனிடையே இந்த வழக்கில் தன்னை நேரடியாக வாதிட அனுமதிக்க வேண்டும்- உச்சநீதிமன்றத்தில் சபரிமலை தலைமை தந்திரி கோரிக்கை வைத்திருக்கிறார்.