ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்பு.. 6 அடி கேப்.. நோ கேண்டீன்! பள்ளிகள் திறப்பு பற்றி வெளியான பரபர தகவல்
டெல்லி: நாடு முழுக்க பள்ளிகள் திறப்பது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக நாடு முழுக்க மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு கிடக்கின்றன. ஒரு சில மாநிலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் ஜூன் 15ஆம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வுகள் துவங்குகிறது. இது ஒருபக்கம் என்றால், அடுத்த கல்வியாண்டு முதல் எவ்வாறு பள்ளிகளை திறப்பது என்பது தற்போது பெற்றோர்களுக்கு மட்டுமின்றி அரசுக்கும் பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
கலெக்டர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை.. ஊரடங்கு நீட்டிப்பு பற்றி நாளை முக்கிய முடிவு?
வழிகாட்டு நெறிமுறைகள்
இது தொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அமைப்புடன் (NCERT) இணைந்து வழிகாட்டு நெறிமுறைகளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் எந்த மாதிரியான அம்சங்கள் இடம் பெற்றிருக்கிறது என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
5ம் வகுப்பு வரை கிடையாது
அப்படி என்ன தகவல்கள் உள்ளன என்று கேட்கிறீர்களா? இதோ பாருங்கள்: ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு கல்வி நிலையங்கள் வரவேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. அதாவது 6 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளி வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அப்படியானால் ப்ரீ கேஜி வகுப்புகளுக்கும் இந்த சலுகை பொருந்தும்.
தனி பேட்ஜ்கள்
ஆறாம் வகுப்புக்கு மேற்பட்ட வகுப்புகளில் படிக்கக்கூடிய மாணவர்களையும், முதலில் மொத்தமாக பள்ளிகளுக்கு வரவைக்க போவது கிடையாது. தனித்தனி பேட்ஜ்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பேட்ஜ் மாணவர்களும், ஒவ்வொரு நாளில் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்படுவார்கள். அப்போதுதான் பள்ளி நிர்வாகம் அவர்களிடம் புதிய விதிமுறைகள் குறித்தும் இருக்கைகள் மாற்றி அமைக்கப்படுவது பற்றியும் விளக்கமாக எடுத்து சொல்ல முடியும். அதற்குத்தான் இந்த ஏற்பாடு.
சீட்டுகள் மாற்றியமைப்பு
வகுப்பறைகளில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் அமரக்கூடிய இருக்கைகள் என்பது சமூக இடைவெளி என்பதை பராமரிக்கும் வகையில் மாற்றியமைக்கப்படும். அதாவது ஒவ்வொரு மாணவரிடையேயும் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளி இருக்கும் வகையில் சீட் அமைக்கப்படுகிறது. அப்படியானால் ஒரே நேரத்தில் மொத்த மாணவர்களும் வகுப்பறையில் அமர முடியாத நிலைமை உருவாகும். எனவே, ஒவ்வொரு வகுப்பும் 15 முதல் 20 மாணவர்கள் அடங்கிய பேட்ஜ் என்ற அளவுக்கு பிரிக்கப்படும். சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும்.
ஒருநாள் விட்டு ஒருநாள்
ஆரம்பகட்டத்தில் பள்ளிகளில் கேன்டீன்களில் செயல்படாது. வீட்டில் இருந்துதான் மாணவர்கள் உணவு எடுத்துச்செல்வது கட்டாயமாகும். வகுப்பறைக்குள் உட்கார்ந்து தான் உணவு சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தப்படும். முதல் சில மாதங்களுக்கு காலை நேர அசெம்ப்ளி தடை செய்யப்படும். பள்ளி வளாகத்தின் பல பகுதிகளிலும் கைகளை சுத்தப்படுத்துவதற்கு சானிடைசர் வசதி செய்து கொடுக்கப்படும். பள்ளி வளாகத்திற்குள் கட்டாயமாக பெற்றோர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு வெளியே விட்டு விட்டு செல்ல வேண்டும்.
உணவு வசதி
வகுப்பறைக்குள் உட்கார்ந்து தான் உணவு சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தப்படும். முதல் சில மாதங்களுக்கு காலை நேர அசெம்ப்ளி தடை செய்யப்படும். பள்ளி வளாகத்தின் பல பகுதிகளிலும் கை கைகளை சுத்தப்படுத்துவதற்கு சானிடைசர் வசதி செய்து கொடுக்கப்படும். பள்ளி வளாகத்திற்குள் கட்டாயமாக பெற்றோர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு வெளியே விட்டு விட்டு செல்ல வேண்டும்.
தனி வழி
மாணவர்கள் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் தனித்தனி பாதைகள் கட்டாயம் இருக்க வேண்டும். இதன் மூலம் கூட்டம் சேர்வது தவிர்க்கப்படும். பள்ளி வகுப்பறை தரைப்பகுதி அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி வைக்கப்படவேண்டும். பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவதற்கு முன்பும், அவர்கள் செல்வதற்கு முன்பும் இந்த சுத்தப்படுத்தும் பணி கட்டாயம் நடைபெற வேண்டும். பள்ளிகள் திறப்பு விவகாரத்தில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகையான வியூகங்களை வகுத்து வருகிறது. ஐரோப்பிய நாடான டென்மார்க் ஏப்ரல் 15ஆம் தேதியே பள்ளிகளை திறந்துவிட்டது. கொரானா வைரஸ் தொடர்பான ஆய்வுகளில் இந்த வைரஸ் சிறு குழந்தைகளை எளிதில் தாக்குவதில்லை என்பது தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.