இதுக்கு மேலயும் உஷாராகவில்லையெனில்... காங். காலாவதியாகும்- எச்சரிக்கும் கட்சி தலைவர்கள்
டெல்லி: ஜோதிராதித்யா சிந்தியாவின் விலகலைத் தொடர்ந்து கட்சி தலைமை சரியான நடவடிக்கைகள் எடுத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் போனால் காங்கிரஸ் என்ற கட்சியே காணாமல் போகும் என்பது அக்கட்சி சீனியர்களின் கருத்து.
Recommended Video
இந்தியாவின் மிகப் பழமையான காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாத தள்ளாட்டத்தில் இருக்கிறார்கள் தலைவர்கள். இன்னமும் இடைக்கால தலைவரை வைத்துக் கொண்டு காங்கிரஸ் காலத்தை நகர்த்துகிறது.
கட்சியின் சீனியர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் இடையே மோதல்கள் எழுவது இயல்புதான். ஆனால் ஆக்கப்பூர்வமான தலைமை இருந்தால் மட்டுமே இப்படியான பிரச்சனைகளை லாவகமாக கையாள முடியும். அப்படி கையாண்டிருந்தால் ஜோதிராதித்யா சிந்தியா போன்ற ஆளுமைகள் காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கமாட்டார்கள்.
மாஜி முதல்வர்கள்
ஆகப் பெருமை வாய்ந்த காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு மாநிலத்திலும் தமது இருப்புக்கு தாமே வேட்டு வைத்துக் கொண்டுதான் வருகிறது. எந்த மாநிலத்தில்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள்/ இளைய தலைமுறையினர் விலகாமல் இல்லை. உத்தர்காண்ட் முன்னாள் முதல்வர் விஜய் பகுகுணா, சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி, ஒடிஷா முன்னாள் முதல்வர் கிரிதர் கோமாங் எனும் பெருந்தலைகள் ஏற்கனவே ஒதுங்கிவிட்டனர்.
குட்பை சொன்ன மாஜி அமைச்சர்கள்
முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜிகே வாசன், ஜெயந்தி நடராஜன் (தமிழகம்), கிஷோர் சந்திரா தியோ (ஆந்திரா), எஸ்.எம். கிருஷ்ணா (கர்நாடகா), பேனி பிரசாத் வர்மா (உபி), ஶ்ரீகாந்த் ஜேனா (ஒடிஷா), சங்கர்சிங் வகேலா (குஜராத்) என காங்கிரஸில் இருந்து வெளியோரின் இன்னொரு பட்டியலும் இருக்கிறது. இவர்கள் அல்லாமல் மாநில தலைவர்களாக இருந்த அசோக் தன்வார் (ஹரியானா), ரீட்டா பகுகுணா ஜோஷி (உபி), போட்சா சத்யநாரயணா (ஆந்திரா), புவனேஸ்வர் கட்டா (அஸ்ஸாம்), யாஷ்பால் ஆர்யா (உத்தரகாண்ட்), அசோக் சவுத்ரி (பீகார்) ஆகியோரும் காங்கிரஸ் கட்சிக்கு குட்பை சொல்லிவிட்டனர்.
நீளும் விலகியோர் பட்டியல்
மேலும் அஸ்ஸாமில் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அருணாச்சல பிரதேசத்தின் தற்போதைய முதல்வர் பேமா காண்டு, திரிபுராவின் சுதீப் ராய், மணிப்பூரின் பைரேன் சிங் என சீனியர்களும் ஏற்கனவே காங்கிரஸை கை கழுவிவிட்டனர். ஹரியானாவின் சவுத்ரி பைரேந்தர் சிங், தெலுங்கானா சீனிவாஸ், மேற்கு வங்கத்தின் மனாஸ் புனியா, கோவாவின் விஸ்வஜித் ராணே, மகாராஷ்டிராவின் நாராயண் ராணே என காங்கிரஸில் இருந்து வெளியேறியவர்கள் பட்டியல் பெரும் நீளமானது. ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ஒய்.எஸ்.ஆர்., தெலுங்குதேசம், பாஜகவில் ஐக்கியமாகிவிட்டனர். இப்போது காங்கிரஸில் விரல் விட்டு எண்ணக்கூடிய சீனியர்கள் இருக்கின்றனர்.
தீர்வு காணும் தருணம்
ஆகையால் இளையதலைமுறைக்கு வாய்ப்பு கொடுத்து தற்போதைய அரசியல் சூழ்நிலைகளுக்கு உடனடியாக ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டிய தலைமைதான் காங்கிரஸுக்கு தேவை. ஆனால் இன்னமும் இடைக்கால தலைவரை நம்பிக் கொண்டு ஒருபுறம்.. எப்போது எந்த தேசத்தில் இருப்பார் என தெரியாத ராகுல் போன்ற மாஜி தலைவர்கள் இன்னொரு பக்கம்.. என காணாமல் போய்க் கொண்டிருந்தால் கட்சி மட்டும் இருக்கவா செய்யும்? எங்கே எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் அதிகாரத்தை அபகரித்துவிடுவதில் உறுதியாக இருக்கும் பாஜகவுக்கு காங்கிரஸ் மேலிடம்தான் செங்கம்பள வரவேற்பு கொடுக்கிறது என்பதும் மிகையல்ல.
இப்போதாவது விழித்தல் அவசியம்
இதனால்தான் ஜோதிராதித்யா சிந்தியாவின் விலகலை முன்வைத்தாவது கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்; நிரந்தரமான தலைவரை நியமிக்க வேண்டும் என்ற குமுறல்கள் காங்கிரஸில் வெளிப்படுகின்றன. இல்லையெனில் இடதுசாரிகள் எப்படி நாடாளுமன்றத்தில் சிங்கிள் டிஜிட்டுக்கு தள்ளப்பட்டார்களோ அதைவிட மோசமான ஒருநிலைக்கு காங்கிரஸ் போய்விடும் என்பது நிதர்சனம் என அக்கட்சித் தலைவர்களே குமுறுகின்றனர்.