பாலியல் புகார்.. தலைமை நீதிபதிக்கு எதிராக போராட திட்டம்.. உச்ச நீதிமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக போராட்டம் நடத்தப்படுவதை தடுக்க உச்ச நீதிமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக போராட்டம் நடத்தப்படுவதை தடுக்க உச்ச நீதிமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது 35 வயதாகும் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார். தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் அளித்த பெண், ஜூனியர் பணியாளாக உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வந்தவர்.
இந்த புகார், நீதிமன்ற உள்விசாரணையாக நடந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போட்பே, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி அமர்வு இதை விசாரித்தது. இந்த விசாரணையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் உண்மையில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க அவசியம் இல்லை, மேலும் நீதிபதிகள் இந்த விசாரணை குழு அறிக்கையை வெளிப்படையாக வெளியிட தேவையில்லை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பிற்கு, புகார் அளித்த பெண் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். நீதியின் மீதான நம்பிக்கை அற்றுப் போய்விட்டதாக புகார் அளித்த பெண் தெரிவித்து இருந்தார். இந்த விசாரணை குழுவின் தீர்ப்பிற்கு நேற்று சில வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் , பெண் அமைப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் இன்று அவர்கள் உச்ச நீதிமன்றம் முன் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது என்றும் தகவல் வந்தது. அதாவது, இந்த வழக்கு விசாரணையில் புகார் அளித்த பெண் கலந்து கொள்ளவில்லை, அவர் சார்பாக வழக்கறிஞர் ஆஜராகவில்லை ஆனாலும் இதில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
இது நீதி கிடையாது, என்று பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். இதனால் இன்று உச்ச நீதிமன்றம் முன் போராட்டம் நடக்க வாய்ப்புகள் இருந்தது. சிறிய அளவில் சில இடங்களில் போராட்டமும் நடந்து வந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக போராட்டம் நடத்தப்படுவதை தடுக்க உச்ச நீதிமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
Delhi: Women lawyers and activists today held a protest outside the Supreme Court against the procedure adopted to deal with sexual harassment case against CJI Ranjan Gogoi. Section 144 has been imposed outside SC following the protest. pic.twitter.com/oefGGSCRCJ
— ANI (@ANI) May 7, 2019
அங்கு தற்போது போலீஸ் குவிக்கப்பட்டு வருகிறது. முக்கியமான வழக்கு விசாரணைகள் நடக்கும் போது மட்டுமே இதுபோன்ற அசாதாரண நடைமுறை கடைபிடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.