ஒரே நாளில்.. குடியரசு தின அணி வகுப்பு.. விவசாயிகள் டிராக்டர் பேரணி.. டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
டெல்லி: குடியரசு தின கொண்டாட்டங்கள் மற்றும் விவசாயிகளின் மாபெரும் டிராக்டர் பேரணி ஒரே நாளில் நடைபெற உள்ளதால் டெல்லியில் பல சாலைகள் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
டெல்லியில், குடியரசு தின அணிவகுப்பு விஜய் சவுக்கிலிருந்து தொடங்கும். விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு மூன்று எல்லைகளில் இருந்து நகரத்திற்கு வரும்.
சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் (யுபி கேட்) ஆகியவைதான் அந்த 3 பாயிண்ட்டுகள். டெல்லி காவல்துறை விவசாயிகளின் டிராக்டர் பேரணி குடியரசு தின கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் தொடங்கும் என்று கூறியுள்ளது. அதாவது காலை 11.30 மணிக்கு மேல் பேரணி துவங்கும்.
ஜி.டி. கர்னல் சாலையில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. குடியரசு தின கொண்டாட்டங்கள் மற்றும் இன்று விவசாயிகளால் நடத்தப்படும் டிராக்டர் அணிவகுப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ராஜ்பாத் மற்றும் தலைநகரின் பல எல்லைப் புள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆயுதம் தாங்கிய போலீசார் மற்றும் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.