குடியரசு தினவிழா கொண்டாட்டம்.. சிறப்பு விருந்தினராக தென்ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா பங்கேற்பு
டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெறும் நாட்டின் 70வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா கலந்து கொண்டுள்ளார்.
டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி உள்ளன. ராஜபாதையில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் காலை 9.50 மணிக்கு தொடங்குகிறது.
இதனை ஒட்டி வரலாற்று சிறப்புமிக்க ராஜ்பாத் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மூவர்ண நிறத்தில் ராஜ்பாத் மட்டுமல்லாமல் இந்தியா கேட்டும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.
டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும், 25 ஆயிரம் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அணிவகுப்பு நடக்கும் சாலைகள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் முழுவதும், போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
உயரமான கட்டடங்கள் மீது, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. ஆளில்லா குட்டி விமானம் மூலமும், கண்காணிப்பு பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அணிவகுப்பில், மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலங்கார வண்டிகள், ஊர்வலத்தில் இடம்பெறுகின்றன. இந்த ஊர்வலத்தில், ரயில்வே துறை சார்பிலும் அலங்கார வண்டி இடம் பெறுகிறது.
தேசத்தந்தை மகாத்மா காந்தி, தென் ஆப்ரிக்க நாட்டில், இனப்பாகுபாடு காரணமாக, ரயிலில் அவமதிக்கப்பட்ட சம்பவம், இதில் தத்ரூபமாக இடம் பெறுகிறது. மேலும், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இன்ஜின் இல்லாத ரயிலான, டிரெயின் 18 மற்றும், 'புல்லட்' ரயில்களின் மாதிரிகளும், இந்த அணிவகுப்பில் இடம்பெறுகின்றன.
மேலும், டெல்லி ராஜபாதை, இந்தியா கேட் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.