144 தடையுத்தரவு.. 20,000 துணை ராணுவத்தினர் குவிப்பு.. டெல்லி இன்று எப்படி இருக்கிறது?
டெல்லி: டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்த நிலையில் இன்று அங்கு பலத்த பாதுகாப்பு தொடர்கிறது. 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று விவசாயிகளுக்கு அனுமதிக்கப்பட்ட பாதையை தவிர்த்து விட்டு வேறு பாதை வழியாக சில விவசாயிகள் செங்கோட்டை நோக்கி சென்றதால் பதற்றம் நிலவியது.
செங்கோட்டையில் முற்றுகையிட்ட சில விவசாயிகள் அங்கு தங்கள் கொடிகளை பறக்க விட்டனர். காவல்துறையினர் விவசாயிகள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். சில விவசாயிகள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். எனவே டெல்லி போர்க்களமானது.
இயல்பு நிலை
இந்த நிலையில் நேற்று இரவு டெல்லி நகரம் காவல்துறை கட்டுப்பாட்டுக்கு முழுமையாக வந்தது. இதையடுத்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பியது.
இன்று விவசாயிகள் டெல்லி எல்லையில் 63வது நாளாக அஹிம்சை போராட்டத்தை தொடர்கிறார்கள்.
வாகன சோதனை
இருப்பினும் இன்று வன்முறை நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை எடுத்துள்ளது. டெல்லிக்கு வரும் அனைத்து வழிகளிலும் வாகன சோதனை செய்யப்படுகிறது.
துணை ராணுவம்
அவசியமான வாகனங்கள் மட்டும் நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன. 150 கம்பெனி துணை ராணுவப் படை அதாவது சுமார் 20,000 வீரர்கள் டெல்லி நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி மெட்ரோ
நேற்று மெட்ரோ ரயில்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் இன்று அவை மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன. நேற்று போர்க்களமாக காணப்பட்ட டெல்லி இன்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.