வி.ஐ.பி.க்களுக்கு பாதுகாப்பு பணி..1,300 'கமாண்டோ' படை வீரர்கள் வாபஸ்.. மத்திய அரசு அதிரடி
டெல்லி: வி.ஐ.பி.கள் எனப்படும் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 1,300 'கமாண்டோ' படை வீரர்கள் அந்த பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டு பிற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் 350 வி.ஐ.பி.களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது. அதில், தேவைக்கு அதிகமாக மற்றும் தேவையே இல்லாமல் 1,300 கமாண்டோ படை வீரர்கள் ஈடுபட்டிருந்தது தெரிந்தது.
இதனைத் தொடர்ந்து, அந்த பொறுப்புகளில் இருந்து வீரர்கள் விலக்கப்பட்டு, அவர்களுக்கு பிற பொறுப்புகள் தரப்பட்டுள்ளன. எனினும் நாடு முழுவதும் 3,000 வீரர்கள் வி.ஐ.பி. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சி.ஆர்.பி.எப். - சி.ஐ.எஸ்.எப். - என்.எஸ்.ஜி. - டெல்லி போலீஸ் படை போன்ற பிரிவுகளின் வீரர்கள் ஆவார்கள்.
இதனிடையே, என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் 'இஸட் பிளஸ்' மற்றும் 'இஸட்' பாதுகாப்பு பல பிரபலங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. அதன்படி, உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவுக்கான இஸட் பிளஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
மேலும், பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், புதியதாக நியமிக்கப்பட்ட இமாச்சல் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் இரு பேத்தி மற்றும் பேரன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இரு மகள்கள், பேரன் ஆகியோருக்கான இஸட் பிரிவு பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டது.