கோடநாடு எஸ்டேட் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்
டெல்லி: கோடநாடு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை மற்றும் அதைத் தொடர்ந்த மர்ம மரணங்கள், தொடர்பாக, முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெஹல்கா இணையத்தள முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் சமீபத்தில் பேட்டியளித்தார்.
எனவே சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
மாநில முதல்வருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அந்த மாநில காவல்துறை விசாரித்தால் உண்மை நிலை வெளி வராது. எனவே உண்மை வெளிவர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு 2 தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, டிராபிக் ராமசாமி மனுவில் போதிய விவரங்கள் இல்லை என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
ஒரு பத்திரிக்கையாளர் கூறிய கருத்தை வைத்துக்கொண்டு எப்படி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியும்? மேத்யூ என்பவர் யார்? என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேள்வி எழுப்பினார்.
டிராபிக் ராமசாமி அவசர அவசரமாக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். எனவே இந்த மனுவில் போதிய விவரங்களை சேர்க்கவில்லை. எனவே, இதன் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட போதிய முகாந்திரம் கிடையாது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில், போதிய ஆவணங்கள் இல்லாமல் இப்படி ஒரு மனுவை டிராபிக் ராமசாமி ஏன் தாக்கல் செய்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், இனிமேல் இதுதொடர்பாக வேறு யாரும் சிபிஐ விசாரணை கேட்டு பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாத சூழல் எழுந்துள்ளது.