ஒரு வேட்பாளர் ஒரே தொகுதி! கட்சிகளுக்கு கடிவாளம் போடும் தேர்தல் ஆணையம்! அரசுக்கு பறந்த பரிந்துரை!
டெல்லி : தேர்தல்களின் போது மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் ஒரு வேட்பாளர் ஒரே தொகுதியில் மட்டும் போட்டியிடும் வகையில் உரிய மாற்றங்களை கொண்டு வர இந்திய தேர்தல் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஜனநாயக நாடான இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தேர்தலுக்கு என்று கணிசமான தொகை செலவிடப்பட்டு வருகிறது. தேர்தல் அதிகாரிகளுக்கு சிறப்பு ஊதியம், பாதுகாப்பு உள்ளிட்டவை காரணமாக கோடிக்கணக்கான ரூபாய்கள் மக்கள் வரிப்பணத்தில் இருந்து செலவிடப்படுகிறது.
நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தல்கள் மட்டுமல்லாது இடைத்தேர்தல்களின் போதும் குறிப்பிட தகுந்த அளவு மக்களின் வரிப்பணம் தேர்தல் செலவினங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. சில நேரங்களில் தேர்தல்கள் தவிர்க்க முடியாதது என்றாலும் பல நேரங்களில் தேவையற்றதாக இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.
6 மாநிலங்களில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நவ.3ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தேர்தல்கள்
உதாரணமாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உள்ளிட்டவற்றை கூறலாம். மேலும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலின் போது ஒரே வேட்பாளர் இரு வேறு தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு பதவியை ராஜினாமா செய்வதன் காரணமாக இடைத்தேர்தல்களும் வந்திருக்கிறது.
தேவையற்ற செலவினங்கள்
தற்போது அல்ல இந்திராகாந்தி காலம் தொட்டு இது போன்ற தேவையற்ற செலவினங்கள் காரணமாக மக்கள் வரிப்பணங்கள் வீணாவதாக புகார்கள் எழுந்திருக்கிறது. பல முக்கிய தலைவர்கள் கடந்த பல ஆண்டுகளில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு பின்னர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்திருக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி கூட கடந்த மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்ற நிலையில் ஒரு எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.
மீண்டும் தேர்தல்
இது மட்டுமல்லாது இந்திரா காந்தி, என்டி ராமராவ், ஜெயலலிதா தொடங்கி மறைந்த தலைவர்களும், தற்போது சோனியா காந்தி, முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் போட்டியிட்டு வருகிறார்கள். இரண்டிலும் வெற்றி பெற்று ஒரு பதவியை ராஜினாமா செய்வதால் அந்த தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும். இது போன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டுமென ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் ஒரு தொகுதியில் வேட்பாளர் ராஜினாமா செய்வதால் அங்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்.
மக்கள் வரிப்பணம்
இதனால் வேட்பு மனு தாக்கல் தொடங்கி வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வரை அதிகாரிகளுக்கான செலவு பாதுகாப்பு நடைமுறைகள் வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறும் ஏற்பாடுகள் என பல கோடி ரூபாய் செலவாகிறது. ஆனால் இது குறித்து வேட்பாளர்கள் எதுவுமே கண்டு கொள்ளவில்லை. அப்படி ஒரு தொகுதியில் ஒருவர் ராஜினாமா செய்தால் அந்தத் தொகுதியில் ஏற்படும் செலவை வேட்பாளரே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக பலர் முன்வைத்து வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே ஒரு பரிந்துரையை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி இருக்கிறது.
தேர்தல் ஆணையம்
மேலும் 33 (7) மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அரசியல்வாதிகள் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்ற விதியை செயல்படுத்தலாம் எனவும் தேர்தல் ஆணையம் யோசனை வழங்கியது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. பிறகு அது தொடர்பான பேச்சுகள் மறைந்து போனது இந்த நிலையில் தான் தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய பரிந்துரையை வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஒரு வேட்பாளர் ஒரே தொகுதி
அதாவது ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதால் மறு தேர்தல் உள்ளிட்ட அதிக செலவு ஏற்படுவதால் மாற்றம் கொண்டுவர வேண்டும் எனவும் ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும் வகையில் உரிய மாற்றங்களை கொண்டு வர அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது தெரியவில்லை.