370-வது பிரிவு ரத்துக்கு எதிராக டெல்லியில் சீமான் தலைமையில் போராட்டம்- சீக்கியர்கள் பங்கேற்பு
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370-வது பிரிவு நீக்கப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு சீக்கியர் அமைப்புகளும் பங்கேற்றன.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு நீக்கியது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை சுமூகமாக இருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்து வருகிறது.
இந்நிலையில் 370-வது பிரிவு நீக்கத்துக்கு எதிராக டெல்லியில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்ற போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் சீக்கியர் அமைப்பு நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிட்டனர். உலகம் முழுவதும் ஒடுக்கப்படுகிற அனைத்து தேசிய இன மக்களுக்காக நாங்கள் குரல் கொடுக்கிறோம்.
குரல்வளை அற்ற ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக தமிழர்களாகிய நாங்கள் குரல் கொடுக்கிறோம். ஜம்மு காஷ்மீர் தலைவர்களை சிறையில் அடைத்துள்ளனர். பொதுமக்களை திறந்தவெளி சிறைச்சாலையில் அடைத்துவிட்டு ஜனநாயகம் பற்றி மத்திய அரசு பேசுவது வேடிக்கையானது என்றார்.