1.20 லட்சம் லிட்டர் கிருமி நாசினிகளை உருவாக்கிய சுய உதவி குழுக்கள்.. நிர்மலா சீதாராமன் பாராட்டு!
இந்தியா முழுக்க சுய உதவிக்குழுக்கள் மூலம் 1.20 லட்சம் லிட்டர் கிருமி நாசினிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியா முழுக்க சுய உதவிக்குழுக்கள் மூலம் 1.20 லட்சம் லிட்டர் கிருமி நாசினிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக இந்தியாவில் பொருளாதாரம் மொத்தமாக முடங்கி உள்ளது.இதை மீட்டெடுப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முதல் முக்கியமான திட்டங்களை அறிவித்தார். அதன்படி 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பதாக அவர் கூறினார்.
இதை தொடர்ந்து நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு (MSME) நிறைய புதிய அறிவிப்புகளைச் செய்தார். இதையடுத்து இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
இனி எல்லா ஊழியருக்கும் ஒரே மாதிரி அடிப்படை ஊதியம்.. அனைத்து துறை பெண்களுக்கும் நைட் ஷிப்ட்: நிர்மலா
இன்று அறிவிப்பு
இந்த நிலையில் நிர்மலா சீதாராமனின் செய்தியாளர் சந்திப்பில் இன்று ஒன்பது விதமான நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இன்றைய அறிவிப்பில் பிற மாநிலங்களில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதே தெருவோரங்களில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள், சிறு மற்றும் குறு விவசாயிகள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவர்கள்தான் கொரோனா காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டார்கள்.
திட்டங்கள் வருகிறது
அதனால் இவர்களுக்கான திட்டங்கள் வகுக்கப்படுகிறது. மேலும் மத்திய அரசு மூலம் இதுவரை நேரடியாக பயன் பெறும்வகையில் 3 கோடி விவசாயிகளுக்கு ஏற்கனவே குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தங்க இடம் கொடுக்க மற்றும் உணவு வழங்க மாநில பேரிடர் நிதியை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அனுமதி மாநில அரசுகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது.
உணவு வழங்கினோம்
இதன் மூலம் அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. அதேபோல் நகர்ப்புறத்தில் வாழும் வீடில்லா ஏழைகளுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று உணவு வழங்கப்படும். மத்திய அரசின் சார்பில் மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
சுய உதவிக்குழுக்கள் உதவி
இந்தியாவில் கிராமங்களையும் கிராமங்களில் செயல்படும் சுய உதவிக்குழுக்களையும் மேம்படுத்த திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் கீழ் ரூ.4,200 கோடி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 7200 புதிய சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் இந்த குழுக்கள் ஈடுபட்டு வருகிறது.
மாஸ்க் எத்தனை
மொத்தம் 12000 சுய உதவி குழுக்கள் இணைந்து மூன்று கோடி மாஸ்குகளை இந்தியாவில் உருவாக்கி உள்ளது. தற்சார்பு திட்டத்தின் மிக முக்கியமான செயல்பாடு ஆகும் இது.மொத்தம் இவர்கள் மூலம் 1.20 லட்சம் லிட்டர் கிருமி நாசினிகள் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் சுய உதவி குழுக்கள் பெரிய அளவில் அரசுக்கு உதவி வருகிறது, என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.