சீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு
டெல்லி: தீபாவளி நெருங்கும் நிலையில், சட்டவிரோத சீன பட்டாசுகள் குறித்து கலால் துறை எச்சரிக்கைவிடுததுள்ளது.
சீன பட்டாசுகளை இறக்குமதி செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்று கலால் துறை முதன்மை ஆணையர் தெரிவித்துள்ளார். அதை வாங்குபவர்கள் அல்லது விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் சட்டவிரோதமாக இந்திய சந்தைகளுக்கு வருவதாக கலால் துறை தெரிவித்துள்ளது.
இதுபற்றிய அறிக்கை: எந்தவொரு நபரும் எந்த வகையிலும் சீனப் பட்டாசுகளை வைத்திருந்தால் அல்லது விற்பனை செய்தால், அவர் மீது கலால்துறை சட்டம் 1962 ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சீன பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தானவை. நமது நாட்டின், வெடி விதிகள் 2008 க்கும் எதிரானவை. சீன பட்டாசுகளில் சிவப்பு ஈயம், காப்பர் ஆக்சைடு மற்றும் லித்தியம் போன்ற மிகவும் ஆபத்தான ரசாயனங்கள் உள்ளன, அவை சுற்றுச்சூழலுக்கும், மக்களின் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தானவை. சீன பட்டாசுகள் நாட்டின் பொருளாதாரத்தையும், உள்நாட்டு தொழிலையும் பாதிக்கின்றன.
இதுபோன்ற சீன பட்டாசுகளின் விற்பனை அல்லது சேமிப்பை பொது மக்கள் கண்டால், 044-25256800 என்ற தொலைபேசி எண்ணுடன் சென்னை கலால்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி கொண்டாட்டங்களை சுற்றுச் சூழல் கெடாமல் நடத்தும் வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அக்டோபர் 26 முதல் 29 வரை கொனாட் பிளேஸில் மாசு இல்லாத தீபாவளி கொண்டாட்டத்தை பிரமாண்டமாக ஏற்பாடு செய்வதாக அறிவித்துள்ளார்.
Principal Commissioner of Customs: Import of firecrackers is ‘Restricted’&if a person acquires possession of or is in any way concerned carrying, keeping, concealing, selling or purchasing or in any manner dealing with Chinese firecrackers will be punished under Customs Act 1962. pic.twitter.com/dTFCmUYVT3
— ANI (@ANI) October 22, 2019
"கொனாட் பிளேஸில் தீபாவளியை பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம். மாசு இல்லாத தீபாவளியை ஒவ்வொரு டெல்லி மக்களும் வந்து கொண்டாட நாங்கள் விரும்புகிறோம், " என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.
கொனாட் பிளேஸ் பகுதியில் லேசர்கள் மற்றும் லைட்டிங் ஷோக்களால் ஒளிர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லேசர் காட்சியின் ஒரு சுழற்சி ஒரு மணி நேரம் நீடிக்கும். இது மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கும். இதில் பங்கேற்க பாஸ் வழங்கப்படும். அனைவரும் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தீபங்களின் திருவிழாவே தீபாவளி. எனவே அதை பட்டாசுக்கு மாற்றாக லேசர் விளக்குகளை கொண்டு, கொண்டாடுவதே கெஜ்ரிவால் நோக்கம்.