நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ரூ1 அபராதம் செலுத்தினார் பிரசாந்த் பூஷண்
டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தண்டனையை ஏற்று ரூ1 அபாரதம் செலுத்தினார் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, இருசக்கர சொகுசு வாகனத்தில் அமர்ந்திருக்கும் படம் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்திருந்தார் பிரசாந்த் பூஷண். இதனையடுத்து பிரசாந்த் பூஷண் மீது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் பிரசாரந்த் பூஷண் குற்றவாளி என தீர்ப்பளித்தது. மேலும் அவருக்கான தண்டனை என்ன என்பது குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது. பிரசாந்த் பூஷனை உச்சநீதிமன்றம் மன்னிப்பு கேட்க கோரியது. ஆனால் இதனை பிரசாந்த் பூஷண் நிராகரித்துவிட்டார்.
இதன்பின்னர் பிரசாந்த் பூஷண், ரூ1 அபராதத்தை செப்டம்பர் 15-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும்; அப்படி செலுத்தாவிட்டால் 3 மாதம் சிறை தண்டனையும் 3 மாதம் அவர் வழக்கறிஞர் தொழிலை மேற்கொள்ள தடையும் விதிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனை ஏற்று பிரசாந்த் பூஷண் இன்று ரூ1 அபராதத்தை உச்சநீதிமன்றத்தில் செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் பூஷண், உச்சநீதிமன்றம் தமக்கு தண்டனை விதித்து அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் கூறினார்.