ஹிமாச்சல் ஆளுநர் குஜராத்துக்கு திடீர் இடமாற்றம்.. ஹிமாச்சல் ஆளுநராக பாஜகவின் கல்ராஜ் மிஸ்ரா நியமனம்
டெல்லி: ஹிமாச்சல் பிரதேசத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் ஹிமாச்சல பிரதேச ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவரான கல்ராஜ் மிஸ்ரா மூன்று முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தவர். கடந்த 2014ம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் டியோரியா தொகுதியில் போட்டியிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் நியாஸ் அகமதுவை விட சுமார் 2லட்சத்து 65 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
சிறுகுறு தொழில்துறையின் கேபினட் அமைச்சராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவி விலகினார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக பதவி விலகிய அவர், கடந்த ஆகஸ்டு 2018 வரை நாட்டின் பாதுகாப்பு நிலைக்குழுவில் உறுப்பினராக பணியாற்றினார்.
இந்நிலையில் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் கல்ராஜ் மிஸ்ரா போட்டியிடவில்லை. இந்த சூழலில் அவரை ஹிமாச்சல் பிரதேச ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
அஞ்சல் தேர்வு விவகாரம்.. சட்டசபையில் காரசார விவாதம்.. திமுக வெளிநடப்பு
ஹிமாச்சல் பிரதேச ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிட மாற்றம் செய்தும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.