எனக்கு நிறைவை தரும் தருணம் இது... அயோத்தி தீர்ப்பு குறித்து பாஜக மூத்த தலைவர் அத்வானி!
டெல்லி: அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று வழங்கிய வரலாற்றுத் தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன் என பாஜக மூத்த தலைவர் அத்வானி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரியை 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன்படி 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும் அங்கு ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் அமர்வு ஒருமனதாக தெரிவித்துள்ளது.
அதேநேரம் முஸ்லீம்களுக்கு மசூதி கட்டுவதற்கு அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து ராமர் கோயில் இயக்கத்தை கையில் எடுத்து பல ஆண்டுகளாக போராடி வந்த பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அத்வானி கூறுகையில், அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று வழங்கிய வரலாற்றுத் தீர்ப்பை நாட்டு மக்கள் அனைவருடன் சேர்ந்து முழு மனதுடன் நானும் வரவேற்கிறேன். எனக்கு நிறைவை தரும் தருணம் இது.
ஏனெனில் இந்த (ராமர் கோயில்) இயக்கத்திற்கான பங்களிப்பை செய்ய சர்வ வல்லமை படைத்த கடவுள் எனக்கு வாய்ப்பு அளித்தார்: இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்குப் பின்னர் இது மிகப் பெரியது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று அதற்கான சாத்தியமான முடிவுகளை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.