பாஜகவின் சலுகைகள் மூலம் சம்பாதித்தவர்களே கவனியுங்கள்! தேர்தல் "பாண்ட்" குறித்து ப.சிதம்பரம் கலாய்
டெல்லி: குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் சட்டப் பேரவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நாளை (அக்.1) முதல் 10ம் தேதி வரை தேர்தல் பத்திரம் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
ஏற்கெனவே தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கக்கூடிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டிவிட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்த ட்வீட் தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
நெருங்கும் விநாயகர் சதுர்த்தி.. இந்து அமைப்பு வழக்கு! நன்கொடை வசூலிப்பது யார்? ஐகோர்ட் கேள்வி
விற்பனை
கடந்த 2018 முதல் தேர்தல் பத்திரம் விற்பனை நடைமுறையில் இருந்து வருகிறது. அதாவது, அரசியல் கட்சியினர் மறைமுகமாக நிதி பெறுவதை தடுக்க இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கும் நிறுவனங்கள் எஸ்பிஐ வங்கிகளில் பணம் செலுத்தி இந்த பத்திரங்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த பத்திரங்கள் 1,000 ரூபாயிலிருந்து தொடங்கி 1 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஆளும் கட்சிக்காக
அதேபோல இவ்வாறு எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். இதை வாங்கும் நிறுவனங்கள் செலுத்தும் தொகை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் நிரந்தர வைப்பு கணக்கில் சேமிக்கப்படும். ஆனால் இதில் ஒரு சிக்கல் மேலெழுந்தது. அதாவது 2018லிருந்து தற்போது வரை விநியோகிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்களில் 60 சதவிகிதத்திற்கும் மேல் ஆளும் கட்சிக்காக மட்டுமே விலை கொடுத்து நிறுவனங்களால் வாங்கப்பட்டுள்ளன.
சந்தேகம்
இது அரசியல் கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, கடந்த 2019-20 ஆண்டுகளில் விற்பனையான தேர்தல் பத்திரங்களின் மதிப்பு ரூ.3,441 கோடி ஆகும். இந்த தொகையில் 75 சதவிகிதம் பாஜகவின் கணக்கில் வந்துள்ளது. சரி இதில் என்ன பஞ்சாயத்து என்று கேட்கிறீர்களா? இந்த மாதிரி பணம் கொடுத்து பத்திரம் வாங்கும் நிறுவனங்களின் பெயர் வெளியில் தெரியாது என்பதுதான் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
விற்பனைக்கு அனுமதி
எந்த நிறுவனம் எவ்வளவு பணம் செலுத்துகிறது என்பது யாருக்கும் தெரியாது. இது ஒருவேளை கருப்பு பணமாக கூட இருக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளனர். இவ்வாறு இருக்கையில் இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இத்தனை நெருக்கடிகளுக்கு இடையேதான் தற்போது நாளை (அக்.1) முதல் 10ம் தேதி வரை தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
கட்டணம்
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டிவிட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, "எலக்ட்ரல் பாண்ட் பத்திரம் நாளை முதல் விற்பனை செய்யப்படுகிறது. எனவே அரசின் மூலமாக பெரும் கடன்கள், ஒப்பந்தங்கள், சலுகைகள் பெற்றவர்கள் ஆளும் கட்சிக்கு தங்களது நிலுவைத் தொகைகளை செலுத்த வேண்டிய நேரமிது என்பதை கவனத்தில் கொள்க" என்று கிண்டலாக ட்வீட் செய்துள்ளார். அதாவது ஆளும் கட்சியிடம் சலுகை பெற்ற நிறுவனங்கள்.. பாஜகவிற்கு நிதி கொடுப்பார்கள் என்று மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளது. கடந்த காலங்களில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட தொகையில் பாதிக்கும் மேலானது ஆளும் பாஜக கட்சிக்கு வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.