இன்று 51-வது வயது- காங்.-ன் நம்பிக்கை நட்சத்திரம்... ராகுல் காந்தி கடக்க வேண்டிய காட்டாறுகள் ஏராளம்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்திக்கு இன்று 51 வயது. நாட்டையே பரிபாலனம் செய்த காங்கிரஸ் லோக்சபாவில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்துக்கே போராடுகிற நிலையில் ராகுல் காந்தி முன் உள்ள சவால்களும் அவர் கடக்க வேண்டிய காட்டாறுகளும் ஏராளமாக இருக்கின்றன.
1970-ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதி பிறந்தவர் ராகுல் காந்தி. இன்று அவருக்கு 51-வது பிறந்த நாள். ராகுல் காந்தியின் குழந்தை பருவத்திலேயே பாட்டி பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை நிகழ்ந்தது. ராகுல் காந்தியின் இளம்வயதில் தந்தை ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில்.. மேலும் 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு!
ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பின்னர் ராகுலின் தாயார் சோனியா காந்தி வழிகாட்டுதலில் காங்கிரஸ் செயல்பட்டது. 10 ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து மத்தியில் ஆட்சி செய்தது.
காங். அகில இந்திய தலைவராக ராகுல்
ஆனால் 2014 லோக்சபா தேர்தலில் மோடி அலையில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத பெருந்தோல்வியை எதிர்கொண்டது. லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத நிலைக்கு போனது. காங்கிரஸின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருந்த நிலையில் சோனியா காந்தியின் உடல்நலக் குறைவால் 2017-ல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவரானார் ராகுல் காந்தி. 2019 லோக்சபா தேர்தலில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தின. ஆனாலும் 2014-ன் தோல்வியில் இருந்து காங்கிரஸால் மீள முடியவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தே ராகுல் காந்தி விலகினார்.
பெரும் பின்னடைவில் காங்.
கடந்த 2 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் இன்னமும் ஒரு தலைவரை அறிவிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. அத்துடன் நாட்டின் பல மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ், பாஜகவின் கொல்லைப்புறமாகவேனும் அதிகாரத்தை கைப்பற்றுதல் எனும் புதிய வியூகத்தால் பெரும் பின்னடைவை சந்தித்தது. வடகிழக்கில் காங்கிரஸுக்கு மாற்றே இல்லை என்கிற நிலை அடியோடு மாறிப் போனது. திரிபுராவில் காங்கிரஸ் கட்சியே பாஜகவாக மாறிப் போனது. மேற்கு வங்கத்திலும் அதே நிலைதான்.
பாஜகவில் காங். இளம் தலைவர்கள்
இன்னொருபுறம் ராகுல் காந்தியின் வலது இடது கரங்களாக இருந்த இளம்தலைவர்களான ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாதா என பலரும் பாஜகவுக்கு தாவிவிட்டனர். எந்த நேரத்திலும் பாஜகவுக்கு தாவக் கூடிய நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார் சச்சின் பைலட். காங்கிரஸ் கட்சியில் முழுமையான மாற்றம் வேண்டும் என்று சீனியர் தலைவர்கள் பலரும் போர்க்கொடி தூக்கிக் கொண்டு நிற்கின்றனர்.
எப்போது முடிவு எடுப்பீங்க?
இப்படி சீனியர்களும் இளைய தலைவர்களும் காங்கிரஸில் அதிகாரம் செலுத்த முட்டி மோதுகின்றனர். இந்த மோதலுக்கு தீர்வு காண முடியாதவராகவே ராகுல் காந்தி ஒதுங்கித்தான் இருக்கிறார். நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகளின் தலைவராக அல்லது பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிற ராகுல் காந்தி இந்த அளவுக்கு முடிவு எடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பது காங்கிரஸுக்கும் நல்லது அல்ல.. அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மதச்சார்பின்மை சக்திகளுக்கும் இந்த போக்கு பின்னடைவைத்தான் தரும்.
ராகுல் முன்பு இருக்கும் சவால்கள்
ராகுலைப் பொறுத்தவரை அடுத்த லோக்சபா தேர்தலுக்குள் காங்கிரஸ் கட்சியை போர்க்காலத்தில் மறுசீரமைத்தாக வேண்டும்; சீனியர், ஜூனியர் பேதங்களை ஒழித்துகட்டி காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுத்தாக வேண்டும். இதனையடுத்து நாடு தழுவிய அளவில் பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைத்தாக வேண்டும். இந்த இரண்டும்தான் ராகுல் முன்பு இருக்கும் ஆகப் பெரும் சவால்கள். இந்த சவால்கள் கடக்கக் கூடியவை அல்ல.. நெருப்பாறுகளும் காட்டாறுகளும் இந்த பயணத்தில் ஏராளமாகத்தான் இருக்கின்றன. காலத்தின் நெருக்கடியிலும் கட்டாயத்திலும் இவற்றை ராகுல் காந்தி எனும் தேசத்தின் இளம்தலைவர் கடந்தாக வேண்டும். அப்போதுதான் நம்பிக்கைக்குரிய தலைவராக பரிணமிக்க முடியும் என்பது ஜனநாயக சக்திகளின் கருத்து.