கொரோனா-மத்திய அரசு அலட்சியம் என விமர்சனம்- வைரலாஜிஸ்ட் ஷாகித் ஜமீல் வல்லுநர் குழுவில் இருந்து விலகல்
டெல்லி: கொரோனா பரவல் விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியமாக நடந்து கொண்டதாக விமர்சித்த சீனியர் வைரலாஜிஸ்ட் ஷாகித் ஜமீல், மத்திய அரசின் வல்லுநர் குழுவில் (Indian SARS-CoV-2 Genome Sequencing Consortia- INSACOG) இருந்து விலகி உள்ளார்.
சீனியர் வைரலாஜிஸ்ட் ஷாகித் ஜமீல் அண்மையில் இந்தியாவின் கொரோனா நிலைமை குறித்து விவரித்திருந்தார். அதில், கொரோனா முதல் அலையை ஒப்பிடுகையில் 2-வது அலையின் தொடக்கமே அதிக பாதிப்புகளை கொண்டதாக இருக்கிறது.
ஒருநாள் கொரோனா பாதிப்பு 96,000 அல்லது 97,000 என்ற நிலையில் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் 4 லட்சத்தில் இருந்து 2-வது அலை தொடங்குகிறது. இதனால் கொரோனா 2-வது அலை தாக்கம் ஜூலை மாதம் வரை நீடிக்கலாம்.
மேலும் இந்தியாவின் கொரோனா புள்ளி விவரங்கள் தவறாகவும் உள்ளன. கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா தாக்கம் குறைந்தது. இதனையடுத்து கொரோனா அச்சமின்றி மிகப் பெரிய அளவில் ஒன்று கூடினார்கள். இதுதான் கொரோனா 2-வது அலை உக்கிரமாக இருப்பதற்கு காரணம்.
குறிப்பாக தேர்தல் பிரசாரங்கள், மத ஒன்றுகூடல்கள் போன்றவை கொரோனா 2-வது அலைக்கு காரணம். அதேபோல் கொரோனா தடுப்பூசி போடுவதிலும் தொய்வு இருக்கிறது என கூறியிருந்தார் ஷாகித் ஜமீல். இந்த நிலையில் மத்திய அரசின் வல்லுநர் குழுவில் இருந்து அவர் விலகி உள்ளார்.
Recommended Video
இருப்பினும் தாம் வல்லுநர் குழுவில் இருந்து விலகியத்ற்கான விரிவான காரணத்தை ஷாகித் ஜமீல் தெரிவிக்கவில்லை. மத்திய அரசு அமைத்த INSACOG வல்லுநர் குழுவானது, உருமாறிய பல்வேறு வகை கொரோனா வைரஸ்கள் குறித்து ஆராய உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.