மாசுபட்ட குடிநீரை பருகியதால் நாளொன்றுக்கு 7 பேர் பலி.. மத்திய சுகாதார துறை அதிர்ச்சி தகவல்
டெல்லி: மாசுபட்ட குடிநீரை பருகியதால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகள் காரணமாக மட்டும் கடந்த ஆண்டு 2,439 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
நாட்டில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், சுகாதார துறை வெளியிட்டுள்ள இத்தகவல் மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதால், தெரு தெருவாக காலி குடங்களை எடுத்து கொண்டு தண்ணீரை தேடி மக்கள் அலைக்கின்றனர். கிராமப் புறங்களிலும், சில நகரங்களில் தேங்கிக்கிடக்கும் நீரையும், ஊற்று தோண்டியும் மக்கள் நீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு முறையாக சுத்தப்படுத்தப்படாத தண்ணீரை குடிப்பதற்கு பயன்படுத்தி வருவதால், பல்வேறு வகையான தொற்று நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் மாசுபட்ட குடிநீரை பருகியதால் ஏற்பட்ட காலரா நோயால் 6 பேரும் ,கடும் வயிற்று போக்கு நோயால் 1,450 பேரும் டைஃபாய்டு காய்ச்சலால் 399 பேரும், மஞ்சள் காமாலையால் 584 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயிற்று போக்கால் இறந்தவர்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளே அதிகம் என, சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள சுகாார துறை அமைச்சகம், தாங்கள் நடத்திய ஆய்வில் நாட்டில் சுமார் 56% மக்கள் நிலத்தடி நீரையே பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் 620 மாவட்டங்களில் சுமார் 56 சதவீத மக்கள் சுகாதாரமற்ற நிலத்தடி நீரையே பருகி வருகின்றனர். இயற்கையாக ஒரு சில காரணிகளால் மாசடையும் நிலத்தடி நீர், ரசாயனம் போன்றவை கலப்பதாலும் மாசடைகிறது.
இப்படி மாசுபட்ட குடிநீரை குடிப்பதால் தான் காலரா, டைஃபாய்டு, வயிற்று போக்கு போன்ற நோய்கள் மக்களை தாக்குகின்றன. நாடு முழுவதும் தற்போது கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளாகவே சுகாதாரமற்ற மாசடைந்த குடிநீரை குடித்ததால் சராசரியாக ஆண்டுக்கு சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதிலும் கடந்த ஆண்டு மாசுபட்ட தண்ணீரை குடித்ததால் சராசரியாக நாளொன்றுக்கு 7 பேர் வீதம் உயிரிழந்துள்ள அதிர்ச்சி தகவலும் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும் மாசுபட்டசுகாதாரமற்ற குடிநீரை குடிப்பதால் காலரா, வயிற்று போக்கு, டைஃபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களால், நாடு முழுவதும் 1.30 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் வெளியானதை அடுத்து அரசு தங்களுக்கு முறையாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் எனஇ பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.