ரயில்வே துறை தனியார் மயமாக்கப்பட்டால் மக்களுக்கு கடும் பாதிப்பு.! எச்சரிக்கும் நிர்வாகிகள்
Recommended Video
டெல்லி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பொது பட்ஜெட்டுடன் சேர்த்து ரயில்வே பட்ஜெட்டும் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதால் ரயில் பயணிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
பொதுபட்ஜெட்டுடன் சேர்த்து ரயில்வே பட்ஜெட்டையும் தாக்கல் செய்யும் நடைமுறை, கடந்த 2017-ம் ஆண்டு முதல் மோடி தலைமையிலான மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டது.
இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய நிதி நிலை அறிக்கையின் போதும் இதே நடைமுறை தான் தொடர உள்ளது. 2019-20-ம் நிதியாண்டிற்கான முழு நிதிநிலை அறிக்கையை, காலை 11 மணிக்கு நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள, நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
2019ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் அபார வெற்றி பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து கடந்த மே மாதம் 17-வது மக்களவை பொறுப்பேற்று கொண்டது. இதில் பிரதமர் மோடியுடன் சேர்ந்து 57 மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர்.
கடந்த மோடி ஆட்சியின் போது பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பு வகித்த நிர்மலா சீதாராமனுக்கு, இம்முறை மத்திய நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைந்த பிறகு, தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
இதன் மூலம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முழு நேர முதல் பெண் மத்திய நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார். நாட்டின்நிதி நிலைமை மோசமாக உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், புதிய அறிவிப்புகள் மற்றும் சலுகைகள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெறுமா என பல்வேறு தரப்பினரும் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.
முன்பு பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் என தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்தது நிதி நிலை அறிக்கை. ஆனால் தற்போது ரயில்வே நிர்வாகத்தையும், பொது பட்ஜெட்டில் சேர்த்துள்ளதால், பொதுமக்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ரயில்வே துறையை தனியார் மயமாக்கினால் மக்கள் பெரும் இழப்புகளை சந்திக்க நேரிடும் என ரயில்வே தொழிலாளர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி பேசிய எஸ்ஆர்எம்யூ தெற்கு ரயில்வே நிர்வாகி கன்னையா, ரயில்வே துறை தனியார் மயமாக்கப்பட்டால் மானியங்கள் நிறுத்தப்பட்டு விடும். இதனால் ரயில் போக்குவரத்தை நம்பி வாழும் சாமானிய மற்றும் அடித்தட்டு மக்கள், மிகவும் பாதிக்கப்படுவார்கள். உதாரணமாக ரூ.50 விலையுள்ள டிக்கெட் தனியார் மயமாக்கப்பட்டால் ரூ.100 வரை உயர்த்தப்பட்டு விடும்.
எப்படி விமானத்தில் பணவசதி படைத்தவர்கள் மட்டுமே செல்ல முடியுமோ, அது போல பணம் வைத்திருப்பவர்களே ரயில் பயணத்தை செய்ய முடியும். ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு ரயில் பயணம் என்பது கனவாகி விடும் என்று எச்சரித்தார். முன்பு ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டதால் தாராளமாக நிதி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் அதனை பொது பட்ஜெட்டுடன் இணைத்து விட்டதால், தற்போதைய நிலவரப்படி ரயில்வே துறைக்கு ரூ.40,000 கோடி வரை நிதி ஒதுக்கினால் மட்டுமே சமாளிக்க முடியும் என்றார். இதனிடையே மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திலுள்ள தென்மாவட்டங்களுக்கு புதிய ரயில்வே திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான அம்சங்கள், இந்த பட்ஜெட்டிலும் மாற்றமின்றி இடம்பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதே போல பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.