முன்னாள் தமிழக ஐஏஎஸ் அதிகாரி சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமனம்
டெல்லி: ரிசர்வ் வங்கியின் கவர்னாக இருந்த உர்ஜித் படேல் திடீர் ராஜினாமாவை தொடர்ந்து புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டார்.
ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமனம் செய்யப்பட்ட சக்திகாந்த தாஸ் 1980-ஆம் ஆண்டு தமிழக பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியாவார். இவரது பதவிக் காலம் 3 ஆண்டுகளாகும்.
இவர் கடந்த ஆகஸ்ட் 2016 முதல் மே மாதம் 2017 வரை இந்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளராக பணியாற்றினார். தற்போது 15-ஆவது இந்திய நிதி குழுவின் உறுப்பினராக தற்போது உள்ளார்.
[தமிழக தலைமைச் செயலாளராக வேண்டியவர்.. பணமதிப்பிழப்பின் மூளை.. யார் இந்த சக்திகாந்த தாஸ்? ]
இந்திய வருவாய் துறையின் செயலாளராகவும் உரத் துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு ஆர்பிஐ கவர்னராக இருந்த ரகுராம் ராஜனின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து அவருக்கு பணிநீட்டிப்பு வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
அப்போது அப்பதவிக்கு தேர்வு செய்யவிருந்தோர் பட்டியலில் சக்திகாந்த தாஸும் முன்னணியில் இருந்தார். ஆனால் மத்திய அரசு துணை கவர்னராக இருந்த உர்ஜித் படேலை தேர்வு செய்தது. இது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில் உர்ஜித்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைய இருந்தது.
எனினும் இவர் மத்திய அரசுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஆர்பிஐ கவர்னர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இந்த நிலையில் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மோடி அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியபோது அதை கையாண்டவர் சக்திகாந்த தாஸ் என்பது நினைவிருக்கலாம்.
ரிசர்வ் வங்கி ஆளுநராக பொருளாதார நிபுணர் அல்லாத ஐஏஎஸ் அதிகாரியை நியமித்திருப்பது புதிய சர்ச்சைக்கும் வழி வகுத்துள்ளது.