வெட்கம் கெட்ட செயல்.. சோனியா காந்தி கடும் கோபம்.. காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் ஆவேச உரை
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இன்று பேசிய, அக்கட்சி இடைக்கால தலைவர் சோனியா காந்தி, வழக்கத்தைவிட மிகுந்த ஆவேசமாக உரை நிகழ்த்தியுள்ளார். பாஜகவையும், மத்திய அரசையும் மிக கடுமையான வார்த்தைகளில் அவர் விமர்சனம் செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சி எம்பிக்களின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி அதில் ஆலோசிக்கப்பட்டது.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: பாஜகவுக்கு அதிக இடங்கள்; தொங்கு சட்டசபை: கருத்து கணிப்பு
இந்த கூட்டத்தில் கட்சியின் இடைக்கால தலைவரும், எம்.பி.யுமான சோனியா காந்தியும் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதை பாருங்கள்:
மகாராஷ்டிரா அரசியல்
மகாராஷ்டிராவில், ஆட்சியை பிடிக்க பாஜக வெக்கம் கெட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தது. அதிகாலை வேளையில் பதவியேற்ற பிறகு அவமானமே காத்திருந்தது. இன்னொரு பக்கம், லாபமீட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களை, நரேந்திர மோடியின் நண்பர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். பாஜக அரசின் அத்தனை முறைகேடுகளையும், விரிவாக இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நமது கட்சி பேச வேண்டும்.
வெட்கம் கெட்ட செயல்
ஜம்மு காஷ்மீர் நிலமை குறித்து அறிய இந்திய அரசியல்வாதிகளை இந்த அரசு அனுமதிக்கவில்லை. ஆனால், ஐரோப்பிய நாட்டு எம்.பிக்களை அனுமதித்துள்ளனர். இது நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரின் வெட்கம்கெட்ட செயல். நாட்டில் ஒரு பகுதியிலுள்ள மக்களின் நிலையை அறிய இந்த நாட்டின் எம்.பிக்களுக்கே உரிமை இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் ஒட்டு கேட்பு
நரேந்திர மோடி அரசு இந்த நாட்டு குடிமக்களின் அடிப்படை உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து வருகிறது. அதன் சமீபத்திய உதாரணம்தான், வாட்ஸ்அப் உளவு. தனிப்பட்ட நபர்களின் வாட்ஸ்அப் உரையாடல்களை ஒட்டுக்கேட்டுள்ளது. இது தனி நபர் சுதந்திரத்தில் கை வைக்கும் செயல்.
கோட்சே
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு தேச பக்தர் என்று, பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் நாடாளுமன்றத்தில் பேசி அது அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நமது கட்சியின் நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளோம். இவ்வாறு சோனியா காந்தி ஆவேசமாக பேசினார்.
|
ராகுல் காந்தி
இதனிடையே நாடாளுமன்றம் வெளியே நிருபர்கள் ராகுல் காந்தியிடம், பிரக்யா சிங் பேச்சு பற்றி கேள்வி எழுப்பியபோது, "இது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மனதில் உள்ள வார்த்தைகள். இதில் நான் என்ன சொல்ல? அந்த பெண்மணி மீது நடவடிக்கை எடுங்கள் என கூறி, எனது கால நேரத்தை வீணாக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை" என்று கூறினார்.