ஒருவேளை பெரும்பான்மை மட்டும் கிடைக்காவிட்டால்.. பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக மாறப்போவது இவர்தான்!
Recommended Video
டெல்லி: நாளை, ஒருவேளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால், அப்போது அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறப்போவது தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் 24 மணி நேரம் கூட கிடையாது. அதற்குள்ளாக வெளியாகப்போகிறது இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்.
எக்ஸிட் போல்கள் என்னதான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று தெரிவித்தாலும், பாஜக தலைவர்கள் பலருக்கேகூட அதில் நம்பிக்கை இல்லை என்று தெரிகிறது.
மக்களுக்கு விசுவாசமாக இருக்கிறேன்... கட்சி பதவியிலிருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம் சூசகம்
பாஜக தலைவர்கள் முயற்சி
பெரும்பான்மைக்கு குறைவான இடங்கள் கிடைக்கும்பட்சத்தில், கூட்டணி கட்சிகளை தக்கவைத்துக்கொள்ளவும், புதிய கூட்டணி கட்சிகளை கொண்டு வரவும் பாஜக தலைவர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோருடன் பாஜக தலைவர்கள் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
பதிலடியில் சரத் பவார்
இந்த நிலையில் பதிலடி தாக்குதலுக்கு காங்கிரஸ் மலை போல நம்பி இருக்கும் பெயர்தான், சரத்பவார். பல கட்சிகளுடனும், காங்கிரசுக்கு ஏற்கனவே பஞ்சாயத்து உள்ள நிலையில், காங்கிரசின் தூதராக செயல்பட்டு வருகிறார் சரத்பவார் என்றால் அது மிகையில்லை. கடந்த இரு நாட்களாக சரத்பவார் எப்போதும் தொலைபேசியும் கையுமாகத்தான் உட்கார்ந்துகொண்டு கூட்டணி வியூகங்களை வகுத்துக் கொண்டு இருக்கிறாராம்.
சரத்பவார் முயற்சி
பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், உடனடியாக பொதுவான கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து வந்து, காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்து விட வேண்டும் என்பதில் சரத்பவார் தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறார். இது தொடர்பாக ஏற்கனவே அவர் சந்திரசேகர ராவ், ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சி தலைவருமான நவீன் பட்நாயக், ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஜெகன்மோகன் ரெட்டியை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரது தொலைபேசி நாட் ரீச்சபிள் என்று சொல்லியபடி இருப்பதால் இன்னும் முயற்சி செய்து கொண்டே இருக்கிறாராம்.
சிம்ம சொப்பனம்
பெரும்பான்மைக்கு குறைவான இடங்கள் கிடைக்கும் பட்சத்தில், எப்படியாவது பிற கட்சிகளை மடக்கி விட வேண்டும் என்று அமித் ஷா முயற்சி, செய்து வரும் நிலையில், பதிலடியாக சரத்பவார் காங்கிரசின் தூதராக செயல்பட்டு வருகிறார். இது பாஜக தலைவர்கள் தூக்கத்தை கெடுத்து உள்ளது. ஒருவேளை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை வரும்போது, பாஜகவுக்கு சரத்பவார் சிம்ம சொப்பனமாக மாறுவார் என்று அடித்துச் சொல்கிறார்கள் அரசியல் பண்டிதர்கள்.