டெல்லி சம்பவத்துக்கு பின்னால் ஏதோ பின்னணி இருக்கிறது... சரத்பவார் சொல்கிறார்!
டெல்லி: மத்திய அரசின் தோல்வியே டெல்லி சம்பவத்துக்கு காரணம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.
சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பது மத்திய அரசின் பொறுப்பு. ஆனால் அரசு தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை என்று அவர் தெரிவித்தார்.
சட்டங்களை திரும்ப பெறக்கோரி இன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையாக மாறி உள்ளது. சில விவசாயிகள் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். தடுப்புகளை போலீசார் மீது விவசாயிகள் எறிந்ததால் போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினார்கள்.
டெல்லி முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் முகாமிட்டு உள்ளதால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. கிட்டத்தட்ட 60 நாட்கள் நாட்கள் அமைதியாக நடந்த போராட்டம் இன்று வன்முறை பாதைக்கு திரும்பியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு மத்திய அரசுதான் காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் ஒழுக்கமான முறையில் போராட்டம் நடத்தினர், ஆனால் மத்திய அரசு அவர்களை கண்டு கொள்ளவில்லை. டிராக்டர் பேரணியும் அமைதியான முறையில் நடந்திருக்க வேண்டும்.
''உண்மையாக போராடும் விவசாயிகள் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும்' - பஞ்சாப் முதல்வர்
இன்று நடந்த சம்பவத்தை யாரும் ஆதரிக்க மாட்டார்கள்,. ஆனால் இதன் பின்னணியில் உள்ள காரணத்தையும் புறக்கணிக்க முடியாது. சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பது மத்திய அரசின் பொறுப்பு. ஆனால் அரசு தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை. மத்திய அரசின் தோல்வியே இந்த சம்பவத்துக்கு காரணமாகும். எனவே அரசு முதிர்ச்சியுடன் செயல்பட வேண்டும். இனிமேலாவது சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று சரத்பவார் கூறினார்.