நிறைய நோ பால்.. தேவையில்லாத ஸ்டிரோக்.. நழுவ விட்ட கேட்ச்சுகள்.. பாஜகவை டபாய்த்த சசிதரூர்!
டெல்லி: பாஜக அரசு கொண்டு வந்த பட்ஜெட்டை கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டு திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் விமர்சனம் செய்துள்ளார்.
எந்த ஒரு விஷயத்தையும் விளையாட்டுடன் ஒப்பிட்டு பேசினால் அது எளிதில் ரீச்சாகும் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதி போட்டிகள் நேற்றைய தினம் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட் குறித்து ஆளும் கட்சியினர் ஆஹா ஓஹோ என பாராட்டி வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சியோ அதில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டி வருகின்றனர்.
விவசாயிகள் தற்கொலை
அந்த வகையில் இதுகுறித்து திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் கூறுகையில், உணவை கொடுக்கும் நமது நாட்டின் விவசாயிகள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இந்த பாஜக அரசால் நடத்தப்படுகின்றனர். இதனால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
திரிசங்கு
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையாற்றிய போது ஜிடிபி என்ற வார்த்தையை வெறும் இரு முறை மட்டுமே பயன்படுத்தியுள்ளார். எனவே இந்த பட்ஜெட் இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் திரிசங்கு நிலையில் உள்ளது.
அட்டகாசமான பவுண்டரி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டி தொடங்கியுள்ளது. அதுதான் தற்போதைக்கு நம் மனதில் பதிந்துள்ளது. இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் பாஜக அரசின் முதல் பட்ஜெட் அட்டகாசமான பவுண்டரிகளை அடிக்கும் என எதிர்பார்த்தோம்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு
ஆனால் இந்த பட்ஜெட்டோ தேவையில்லாத ஸ்ட்ரோக்குகளும், விடுபட்ட கேட்சுகளும், கொஞ்சம் நோ பால்களும், வைட்களும் தான் இருந்தன. இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்தும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்தும் தீர்வு காணப்படவில்லை.
சசிதரூர்
இந்திரா காந்திக்கு பிறகு பட்ஜெட் தாக்கல் செய்த 2-வது பெண்மணியாக மீண்டும் வரலாறு படைத்து விட்டார், நிர்மலா சீதாராமன். இதற்காக எனது கட்சி சார்பில் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன் என்றார் சசி தரூர்.