''அக்யூஸ்ட்'' என்று விமர்சித்த ரவிசங்கர் பிரசாத்.. மானநஷ்ட வழக்கு தொடுத்தார் சசிதரூர்!
சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக தவறான கருத்து தெரிவித்ததாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மீது சசிதரூர் மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.
டெல்லி: சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக தவறான கருத்து தெரிவித்ததாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மீது முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.
காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தருரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
சுனந்தாவின் மரணம் இயற்கை மரணம் அல்ல என்று அறிக்கை வந்ததை அடுத்து அதுகுறித்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக ரவிசங்கர் பிரசாத் தெரிவித்த கருத்து பிரச்சனை ஆகி இருக்கிறது.
சசிதரூர் என்ன சொன்னார்
சில நாட்களுக்கு சசிதரூர் தனது டிவிட்டரில் பிரதமர் மோடி குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். அதில் ''பிரதமர் மோடி ஒரு சிலந்தி போன்றவர். அவர் வீட்டின் உயரமான இடத்தில் இருக்கிறார். அவரை விரட்டுவது மிகவும் கடினம். ஆனால் விரட்டித்தான் ஆக வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
பதில் அளித்தார்
இதற்கு பதில் அளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ''சசிதரூர் ஒரு கொலை குற்றம் சாட்டப்பட்டவர், அவர் கடவுள் சிவனை நிந்தனை செய்வதா?'' என்று கோபமாக கேள்வி எழுப்பி இருந்தார்.
மன்னிப்பு கேட்க வேண்டும்
இந்த நிலையில் ரவிசங்கர் பிரசாத் தனது கருத்திற்கு 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சசிதரூர் அவருக்கு கடிதம் எழுதினார். இதற்கு பதில் அளித்த ரவிசங்கர் பிரசாத்தின் வழக்கறிஞர், ரவிசங்கர் பிரசாத் சொன்னதில் தவறு கிடையாது என்று கூறினார். மேலும், சுனந்தா புஷ்கர் வழக்கில் சசிதரூர் விசாரிக்கப்படுவதால், ரவிசங்கர் பிரசாத் அப்படி கூறியதில் தவறில்லை என்றார்.
வழக்கு தொடுத்தார்
இந்த நிலையில் தற்போது ரவிசங்கர் பிரசாத்திற்கு எதிராக சசிதரூர் மானநஷ்ட வழக்கு தொடுத்து இருக்கிறார். தன்னை தகாத முறையில் சமூக வலைத்தளங்களில் பேசியதாகவும், இதற்கு ரவிசங்கர் பிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வழக்கு தொடுத்துள்ளார்.