'காந்தியை ஜின்னாவின் சிந்தனை வென்றுவிடும்' இந்திய குடியுரிமை மசோதா குறித்து சசிதரூர் கடும் தாக்கு
டெல்லி: நாடாளுமன்றத்தில் குடியுரிமை (திருத்த) மசோதா நிறைவேற்றப்படுவது மகாத்மா காந்தியை, முகமது அலி ஜின்னாவின் சிந்தனைகள் வெல்வதை குறிக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர் தெரிவித்தார், மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவது என்பது இந்தியாவை "பாகிஸ்தானின் இந்துத்துவா பதிப்பாக". மாற்றிவிடும் என்று எச்சரித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், பாஜக அரசாங்கம் "ஒரு சமூகத்தை" தனிமைப்படுத்த விரும்புவதாகவும், மற்ற சமூகங்களைப் போலவே அதே நிலைமைகளின் அடிப்படையில் மக்களுக்கு ஒடுக்குமுறையிலிருந்து தஞ்சம் கொடுக்க மத்திய அரசு மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
பி.டி.ஐ- செய்தி நிறுவனத்துக்கு சசிதரூர் அளித்த பேட்டியில் "குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியிருந்தாலும், இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரான "அப்பட்டமான மீறலை" உச்சநீதிமன்றத்தின் எந்த நீதிபதிகள் அமர்வும் அனுமதிக்காது என்று நம்புகிறேன்.
மத அடிப்படை
மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் அரசின் செயல் கேவலமானது. கடந்த ஆண்டு தஞ்ச கொள்கையை அரசு உருவாக்கிய போது அது தொடர்பான எந்த விவாதத்துக்கும் மத்திய அரசு தயாராக இல்லை. விவாதத்துக்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. நான் இதற்காக நாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தேன். அத்துடன் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சரை தனிப்பட்டமுறையில் சந்தித்து கோரிக்கை வைத்தேன்.
அகதிகள் நிலை
இந்நிலையில் திடீரென்று, மத்திய அரசு அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதில் அவசரம் காட்டுகிறது அதேசமயம், அகதிகளின் நிலையை நிர்ணயிப்பதை மேம்படுத்துவதற்காக அல்லது அகதிகளுக்கு முறையான சிகிச்சையை உறுதி செய்வதற்காக சர்வதேச சட்டத்தின் கீழ் தேவைப்படும் அடிப்படை நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு விரும்பவில்லை,
இந்துத்துவா பதிப்பு
அரசின் இந்த செயல்கள் அனைத்தும் இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு முழு சமூகத்தையும் மேலும் தனிமைப்படுத்துவதற்கும், விலக்குவதற்குமான இழிவான அரசியல் செயலாகும். அப்படி செய்யும்போது, இந்தியாவின் நாகரிகத்தைப் பற்றிய நல்லதும் உன்னதமானதுமான அனைத்தும் கெட்டுப்போய் விடும். பாகிஸ்தானின் இந்துத்துவா பதிப்பாக நம்மை மாற்றிவிடும்,
மதம் தேசம்
மதம் தேசத்தை நிர்ணயிப்பவராக இருக்க வேண்டுமா என்ற பிரச்சினையில் தான் இந்தியாவின் சுதந்திர இயக்கம் பிளவுபட்டுள்ளது, அந்தக் கொள்கையை நம்பியவர்கள்தான் பாகிஸ்தானின் கருத்தை ஆதரித்தனர். "மகாத்மா காந்தி, (ஜவஹர்லால்) நேரு, மவுலானா (அபுல் கலாம்) ஆசாத், டாக்டர் அம்பேத்கர் இதற்கு நேர்மாறாக நம்பினார்கள், மதத்திற்கும் தேசத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் அனைத்து மதங்கள், அனைத்து பிராந்தியங்கள், அனைத்து சாதிகள் மற்றும் அனைத்து மொழிகள் பேசும் மக்களுக்குமான தேசத்தை உருவாக்க விரும்பினார்கள்.ஆனால் இந்த மசோதா நிறைவேற்றப்படுவது மகாத்மா காந்தியைப் பற்றிய ஜின்னாவின் சிந்தனையின் உறுதியான வெற்றியைக் குறிக்கும்." இவ்வாறு சசி தரூர் கூறினார்.
லோக்சபாவில் நிறைவேற்றம்
மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவின் படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், ஜைனர்கள், பவுத்தர்கள் உள்ளிட்டோருக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பான மசோதா, லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேறிவிட்டது.
பேச்சுவார்த்தை
தற்போது ராஜ்யசபாவில் இதனை தாக்கல் செய்ய இருக்கிறது மத்திய அரசு. ராஜ்யசபாவில் நாளை உள்துறை அமைச்சர் அமித்ஷா இதனைத் தாக்கல் செய்ய உள்ளார். இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 245 எம்.பிக்களைக் கொண்ட ராஜ்யசபாவில், தற்போது 238 எம்.பிக்கள் உள்ளனர். மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்ற 120 எம்.பிக்கள் ஆதரவு தேவை. பாஜக தலைமையிலான கூட்டணிக்கு 102 எம்.பிக்கள்தான் உள்ளனர். தற்போது 18 எம்.பிக்களின் ஆதரவுக்காக அதிமுக, பிஜேடி, டி.ஆர்.எஸ்., ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த கட்சிகள் ஆதரித்தால் மசோதா சட்டமாகிவிடும்.