ராகுல் ராஜினாமாவை எதிர்த்து டெல்லியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் தர்ணா.. சென்னையிலும் பேரணி
டெல்லி: டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்வதை தடுக்க அவரது வீடு முன்பு தர்னா போராட்டத்தில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் ஈடுபட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைமை பொறுப்பிலிருந்து விடுபடலாம் என முடிவு செய்துள்ளார். இதை மூத்த தலைவர்கள் சமாதானம் செய்தனர்.
பின்னர் ராகுல்காந்திதான் காங்கிரஸ் தலைவர் என காங்கிரஸ் காரிய கமிட்டியில் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ராஜினாமா செய்வதில் ராகுல் உறுதியாக உள்ளதாக அறிவித்துள்ளார். இதையடுத்து 5-ஆவது நாளாக அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ராகுல் உறுதி
ஆனால் அவர் கட்சி தலைமை அலுவலகத்துக்கும் வரவில்லை. கட்சி தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை. தனது குடும்பத்தைச் சேர்ந்த யாரையும் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யாமல் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என மூத்த தலைவர்களிடம் ராகுல் உறுதியாக தெரிவித்துவிட்டார்.
பதாகைகள்
இந்த நிலையில் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் ராகுல் காந்தியின் இல்லத்திற்கு அருகே தர்னா போராட்டம் நடத்தி வருகிறார். அவருடன் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் தர்னா செய்து வருகின்றனர். அவர்கள் ராகுல் ராஜினாமாவுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர்
அது போலே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே நீடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றக் கோரி சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொண்டர் தீக்குளிக்க முயற்சி
ராகுல் ராஜினாமா செய்யக் கூடாது என வலியுறுத்தி காங்கிரஸ் தொண்டர் ஒருவர் சென்னை தேனாம்பேட்டையில் தீக்குளிக்க முயற்சித்தார். உடனே அவருடன் இருந்தவர்கள் அந்த தொண்டரை சமாதானம் செய்தனர்.